
காக்கை குருவி எங்கள் ஜாதி
எங்கள் உறவினர் திரு தங்கராஜ் சிவகாசியில் பறவைகளுக்கு தினந்தோறும் வீட்டு மொட்டை மாடியில் தான்யங்களும் தொட்டியில் நீரும் கடந்த மூன்று வருடங்களாக வைத்து பராமரித்து வருகிறார். இது எளிய செய்தியாக இருக்கும். நேரில் பார்த்தால் அதில் உள்ள சிரமங்களும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், அவரது விடா முயற்சியும் தெரியும்.
நாங்கள் உங்களை சிவகாசிக்கு திரு தங்கராஜ் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம். சிவகாசியில் விருதுநகர் புறவழிச் சாலையில் சுப்ரமணியபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது. நமது களம் வீட்டின் இரண்டாவது மாடி - மொட்டை மாடி - 25' X 25' - சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன. பக்கங்களில் நிறைய மரங்கள் உள்ளன. மாடியில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்று வைத்திருக்கிறார், உபரியாக சின்டெக்ஸ் நீர்த்தேக்கம் ஒன்றும் வைத்திருக்கிறார். மாடிச் சுவரில் பறவைகள் நீர் அருந்துவதற்காக இரண்டு சிமின்ட் தொட்டிகள் வைத்திருக்கிறார்.
அளவு இரண்டு அடி நீளம், ஒரு அடி அகலம், அரை அடி ஆழம். இவை பறவைகளுக்காக தேடிப் பிடித்து விசேஷமாக ஆர்டர் கொடுத்து வாங்கப் பட்டவை. பிளாஸ்டிக், மற்றும் இரும்பு தகடுகளில் செய்தால் தண்ணீர் சீக்கிரம் சூடாகி விடும். பறவைகள் நீர் அருந்த வராது என்கிறார்.
அந்த மூலையிலே ஒரு தண்ணீர் குழாய் அமைத்திருக்கிறார். தரை முழுவதும் பாருங்கள். தான்யங்கள் சிதறிக் கிடக்கின்றன. அரிசி, கோதுமை முதலியன.
இவர் பறவைகளை பராமரிக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். ஒரு பாத்திரத்தில் தான்யங்களை வைத்துப் பார்த்திருக்கிறார். பறவைகள் நீர் மட்டும் அருந்தி விட்டு சென்று விடுகின்றன. ஒரு நாள் இவரது குழந்தைகள் விளையாட்டில் தான்யங்கள் பாத்திரங்கள் கொட்டி தான்யங்கள் சிதறி விடுகின்றன. மறு நாளிலிருந்து பறவைகள் தான்யங்களை பொறுக்க ஆரம்பிக்கின்றன. அதிலிருந்து தான்யங்களை விதை விதைப்பது போல் தூவ ஆரம்பித்து விட்டார்.
காலை ஆறு மணியிலிருந்து பத்தரை மணி முடிய காகங்கள் வரும், நீர் அருந்தி விட்டு தான்யங்களை பொறுக்கிவிட்டு செல்லும், விசேஷமாக வடை வாங்கி சிறிய துண்டுகளாக பிய்த்து மேலே சிமின்ட் கிராதி மேல் தூவுகிறார். காகங்கள் விரும்பி உண்கின்றன. இவர் சற்று தாமதமாகி விட்டால் காகங்கள் கரைகின்றன. இவரை ஞாபகப் படுத்துகின்றன. இதற்கு இவரது குழந்தைகள் - ஸ்வேதா, ஸ்வாதி - ஒத்துழைப்பும், ஆர்வமும் அதிகம்.
பறவைகளுக்காக இவர் மொட்டை மாடியை உபயோகிப்பதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் - காலை பத்தரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி முதல் - துணிகள் காயப்போடுவது, வடகம், கோதுமை போன்ற தான்யங்கள் காயப் போடுவது, குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் போன்றவை. உணவுப் பொருட்கள் காயப் போட்டால் கருப்பு துணி விரித்து காயப் போடுகிறார்கள். பறவைகள் கருப்பு நிறத்திற்கு வராது என்கிறார்.
இன்று (22.5.11) ஞாயிற்றுக் கிழமை மதியம் சுமார் மூன்று மணி இருக்கும். மொட்டை மாடி காலியாக இருக்கிறது.
பறவைகள் ஆள் நடமாட்டம், ஏதாவது அசைவுகள் இருந்தால் இறங்காது என்பதால் நாங்கள் மூடிய கதவிற்கு பின்னால் நின்று கொண்டு கிராதியின் துவாரங்கள் வழியாக பார்த்துக் கொண்டு காத்திருக்கிறோம். மெதுவாக ஒரு புறா மட்டும் சுவரில் வந்து அமர்கிறது.
படிப்படியாக எதிரில் உள்ள சுவரில் மற்ற புறாக்கள் காத்திருக்கின்றன. இந்த ஒற்றைப் புறாவின் சைகைக்காக காத்திருக்கின்றன. இடையிடையே காக்கைகள் வந்து தண்ணீர் குடித்து விட்டு, சில குளித்து விட்டும் செல்கின்றன. அணில்கள் வந்து தான்யங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தி விட்டும் செல்கின்றன.
அணில் இரண்டு கால்களில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களில் சாப்பிடும் அழகு அழகு தான்.
நிறைய நேர காத்திருப்பிற்குப் பின் ஒரு புறா இறங்குகிறது. பின் படிப்படியாக இறங்குகின்றன. ஒரே தடவையில் கிட்டத்தட்ட நாற்பது புறாக்கள் வரை இறங்குகின்றன.
கிட்டத்தட்ட நான்கைந்து வகைகள் இருப்பது போன்று தெரிகின்றது. ஆண் புறா சற்று பெரிதாக இருக்கின்றது. கம்பீரமாக இருக்கின்றது. கூட்டமாக இரை எடுக்கும்போது ஆண் புறா சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்வது போல் கம்பீரமாக வருகிறது. பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. படங்களை பாருங்கள்.
ஏதாவது சாலையில் வண்டிச் சத்தமோ ஏதாவது வெடிச் சத்தமோ ஏதவாது பாத்திரங்கள் விழும்போது உள்ள சத்தங்களோ கேட்டால் உடனே கூட்டமாக கிளம்பி விடுகின்றன. ஒரே தடவையில் உடனே கிளம்பி விடுகின்றன. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
கரிச்சான் குருவி, சிட்டுக் குருவி, மைனா, காகங்கள், அண்டங்காக்கா போன்ற பறவைகள் வருகின்றன. தற்போது மயில்களும் காலையில் வருகின்றன என்றார். படங்களை பாருங்கள்.
திரு தங்கராஜைப் பற்றி, இவர் எனது மூத்த தமக்கையின் மகன். படிப்பு என்னைப் போல் பத்தாவது வகுப்பு தான். பிறந்த ஊர் சிவகாசி. சிவகாசி என்றாலே சுறுசுறுப்பு தான். இந்த மண்ணை மிதித்தாலே சுறுசுறுப்பு உங்களை பற்றிக் கொள்ளும். வந்து பாருங்களேன். இங்குள்ள மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று. இரவும் பகலும் சந்தோசமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்தியா முழுக்க சுற்றி வருவார்கள். எனவே வெளியே உள்ள மாறுதல்கள், கட்டிடக்கலை, துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவைகள், புதிய வாகனங்கள் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள். எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, நல்ல வாழ்க்கை தரம், படிப்பிற்கு உதவுவது, தொழிலாளர்களுக்கு உதவுவது - கிட்டத்தட்ட ஒரே குடும்பம் போன்று தான் இருப்பார்கள் - நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
இவர் மின்சார வயரிங் சம்பந்தப்பட்ட சிறிய தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவரது மனைவியும் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். கீழே தொழிற்சாலை, மாடியில் வீடு. மதியத்திற்கு பிறகு இவருக்கு வேலையும் சேர்த்து பறவைகளைக் கவனிப்பதுவும் ஒரு வேலை தான். இரண்டரை மணிக்குப் பிறகு மணிக்கொரு தடவை மாடிக்குப் போய் பறவைகள் சாப்பிட சாப்பிட தான்யங்களை தூவி விட்டு,
தண்ணீர் குறைந்தால் பக்கத்துக்கு குழாயிலிருந்து பிடித்து ஊற்றி விட்டு வருகிறார். இந்தப் பணி ஆறரை மணி வரை நடக்கிறது. தினந்தோறும் இவரே தொட்டிகளை கழுவி தண்ணீர் மாற்றி விடுகிறார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை மொட்டை மாடியை நன்கு பெருக்கி சுத்தம் செய்கிறார். இவர் வேலைக்கு வெளியில் செல்ல வேண்டியிருந்தால் இவரது மனைவி இந்தப் பணியை செய்கிறார். இவர்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் மாற்றி விட்டு தான்யங்களை நிறைய போட்டு விட்டு செல்கிறார்கள்.இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி செல்கிறார்கள். குழந்தை வளர்ப்பு போல் கவனித்துக் கொள்கிறார்கள்.
தினந்தோறும் கிட்டத்தட்ட மூன்று கிலோ அரிசி, அரைக் கிலோ கோதுமை, மற்றும் வடை முறுக்கு (மாற்றி மாற்றி) கொடுத்து வருகிறார். இந்தச் செலவு இவருக்கு பெரிதல்ல.
இவரது பொன்னான நேரமும், இவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், இவரது அர்ப்பணிப்பு உணர்வும் தான் போற்றத் தக்கது. நாங்கள் இவரையும் இவரது குடும்பத்தினரையும் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.
மற்றுமொரு செய்தி - ஒரு ஊனமுற்ற காக்கை வாடிக்கையாக வந்து நீர் அருந்தி செல்கிறது.
சில நேரம் நோயுற்ற காக்கை, அணில்கள் அந்த சின்டெக்ஸ் தொட்டி அருகில் வந்து இருக்குமாம். இவர் அதற்கு தனியாக தண்ணீர், உணவு வைப்பாராம். இரண்டு மூன்று நாட்கள் கூட தொடர்ச்சியாக இருக்குமாம். சரியானவுடன் சென்று விடுமாம். மரணமடைந்து விட்டால் அப்புறப் படுத்தி விடுவாராம். பறவைகளுக்கும் அணில்களுக்கும் இவருக்கு பாசப் பிணைப்பு அப்படி இருக்கிறது.
இந்த பதிவு ஒரு ஞாயிறு மாலைப் பொழுது முழுவதையும் எங்களுக்கு ஒதுக்கி எங்களுக்கு வசதி செய்து கொடுத்த திரு தங்கராஜ் குடும்பத்தினருக்கும், எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும்,
எனது மனவோட்டத்தை புரிந்து புகைப்படங்கள் எடுத்த (கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அந்த கதவிற்கு பின்னால் நின்று) எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - முடிந்தால் நீங்களும் உங்களது வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமின்ட் தொட்டியில் நீர் வைத்து உணவுகளும் கொடுத்து (தான்யங்கள் அல்லது சோறு) பறவைகளை பராமரியுங்கள். ஏதாவது விபரங்கள் தேவைஎன்றால் என்னை தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள். நான் அவரிடம் கேட்டு உங்களுக்கு முடிந்த உதவி செய்கிறேன்.
இந்த பதிவை படித்து நிறை குறை ஆலோசனைகள் எழுதுங்கள்.
மிக்க நன்றி.