Thiruvannamalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thiruvannamalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 08, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலை (ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்)

ஸ்ரீனிவாசப் பெருமாள்
  இந்த மலை 350 படிக்கட்டுக்கள் மேல் அமைந்த்துள்ளது.  படிக்கட்டுக்கள் மேல் வெயிலுக்காக மேற்கூரை கற்பலகைகள் பரப்பி அமைக்கப் பட்டுள்ளது. இது சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப் பட்டுள்ளது.  படிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வயதான பக்தர்கள், ரத்த அழுத்த, இருதய நோய் உள்ளவர்கள் படி ஏறுவது சிரமம் என்பதால் ஏறும் தூரத்தை கணக்கிட்டு பிரித்து இடையில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல மூன்று மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன.  இது ஒரு ஆச்சரியமான, புதிய தகவல்.  


 திருவண்ணாமலை வருவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  நகரப்பேருந்துகள், சிற்றுந்துகள் (அரை மணிக்கு ஒரு முறை), ஆட்டோக்கள் இருக்கின்றன.  மலை அடிவாரத்தில் ஒரு காலி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இருக்கிறது.  அடிவாரத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கான மடங்கள் இருக்கின்றன.  மலையில் கல்யாணங்கள் நடக்கும்போது சமையல், சாப்பாடு நடப்பதற்கு இந்த மடங்கள் பயன்படுகின்றன.  பூ, பழங்கள், துளசி மாலைகள் விற்பதற்கு சின்ன சின்ன கடைகள் இருக்கின்றன.  சின்ன தேநீர் , காபி, குளிர்பான கடைகள் இருக்கின்றன.  உணவு அருந்தும் அளவு உணவு விடுதிகள் கிடையாது.  குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும் தற்காலிக கடைகள் இருக்கின்றன.  எனவே வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தே தண்ணீர், சிற்றுண்டிகள், தேவைப்பட்டால் உணவு கொண்டு வந்து விட வேண்டும்.  இங்கு அடிவாரத்தில் சிறு குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது  நல்லது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அரசினரால் நிறைய அளவில் சிறப்பு பேருந்துகளும், காவல் துறையினரால் பாதுகாப்பும் அருமையாக செய்யப்படுகிறது.  இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.

  இனி கோவிலுக்கு செல்வோம்.  நுழைவில் முடி காணிக்கை மடம் இருக்கிறது.  சுற்றி உள்ள கிராமங்களுக்கு ‘திருவண்ணாமலை பெருமாள் தான் குல தெய்வம்.  நிறைய மொட்டை போடுவது காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.  செல்லும் பாதையில் கருப்பணசாமி கோவில் இருக்கிறது.  இவர் தான் இந்த கோவிலுக்கு காவல் தெய்வம் என்கிறார்கள்.  அடிவாரத்தில் பெரிய ஆலமரத்தினடியில் வினாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்கள். 


 தவிர நேர்த்திக் கடனுக்காக நூற்றுக் கணக்கில் வினாயகர் சிலைகளும், நாகர் சிலைகளும் அடித்து வைக்கப் பட்டிருக்கின்றன.  அருகில் ஆதி வினாயகர் கோவில் இருக்கிறது.  இவரது உயரம் பனிரெண்டு அடி, அகலம் எட்டு அடி.  நல்ல உயரம், ஆஜானுபாவமான, கம்பீரமான தோற்றம்.   

 சுமார் 47 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து திருவண்ணாமலையின் கிழக்கே கலிசலிங்க ஐயனார் கோவில் அருகில் உள்ள ஊரணியில் ஒரு வினாயகர் சிலை உள்ளது.  எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உத்தரவு கொடுத்தார்.  அதன் பின் சாலியர்கள் சமுதாயத்திலிருந்து சென்று எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, பிரமாண்டமான கோவில் கட்டி அருமையாக பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்கள். 
  திருவண்ணாமலையின் அடிவாரத்தில் ஒரு தெப்பம் அமைந்துள்ளது.  அது கோனேரி என அழைக்கப் படுகிறது.  மழைக்கு மலை அடிவாரத்திலிருந்து தண்ணீர் வந்தால் நிறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.  முன்பு கோவில் பூஜைக்கு, இங்கு நடக்கும் கல்யாணங்களுக்கு சமையலுக்கு, குடி நீர் தேவைக்கு, இங்கிருந்து தான் தண்ணீர் எடுக்கப் பட்டு பயன்படுத்தப் பட்டது.

  மலை நுழைவு வாசலில் பெரிய மண்டபம் இருக்கிறது.  அங்கு ஒவியங்கள் இருக்கின்றன.  விழாக்காலங்களில் சாமி வந்து வீற்றிருக்க, பக்தர்கள் தரிசனத்திற்கான மண்டபம்.  இப்போது பிரசாத கடைகள் இருக்கின்றன.
  இங்கு பக்தர்கள் உட்கார்ந்து இளைப்பாறி செல்லலாம்.ஒரளவு படிகளைக் கடந்து சென்ற உடன் முதல் மண்டபம் வருகிறது.  திண்ணை அமைப்புகள் இருக்கின்றன.  பக்தர்கள் இளைப்பாறி செல்லலாம்.  அருகில் ஒரு அறை இருக்கிறது.  அது அர்ச்சகர்கள் தங்குவதற்காக இருக்கலாம்.
  இன்னும் ஒரளவு படிகளை கடந்து சென்றால் இரண்டாவது மண்டபம் இருக்கிறது.  அருகில் சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்.  இங்கும் திண்ணைகள் இருக்கின்றன.  பக்தர்கள் இருந்து இளைப்பாறி செல்லலாம். நமது முன்னோர்களின் முன்னேற்பாடு, யோசனைகள், மனித நேயம் ஆச்சரியப் பட வைக்கின்றன. 
  இன்னும் ஒரளவு படிகளை கடந்து சென்றால் மூன்றாவது மண்டபம் சற்று பெரிதாக நிறைய சிலைகளுடன், நிறைய ஒவியங்களுடன் இருக்கின்றது.  இங்கும் இருந்து செல்வதற்கு வசதியாக நிறைய இடம் இருக்கிறது.  இங்கும் குளிர் பான கடைகளும், பிரசாத கடைகளும் அமைந்திருக்கின்றன.

இப்போது திருவண்ணாமலை உயரே வந்து விட்டோம்.  பிரகாரம் சுற்றி வருவோம்.  சுவர் முழுக்க அழகு சித்திரங்கள்.  தேவஸ்தான அனுமதியுடன் (அதற்கான கட்டணம் செலுத்தியிருக்கிறோம்) அனைத்தும் புகைப்படங்கள் எடுத்து இணைத்திருக்கிறோம்.


  பிரகாரத்தின் வட மேற்கு மூலையில் பெருமாளுக்கு நேர்த்திக் கடனுக்காக செய்து போட்ட பாதுகைகள் (செருப்புகள்) கிடக்கின்றன.  
அதை எடுத்து பக்தர்கள் மார்பிலும், தோளிலும் அடித்துக் கொள்கிறார்கள்.  அது ஒரு நம்பிக்கை.
ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு வருகிறோம்.  கருடாழ்வர் முன்பு இருக்கிறார்.  பெருமாள் நின்ற கோலம்; கிழக்கு பார்த்த கோலம்; நன்கு உயரமாக, ஆஜானுபாவமான தோற்றம்.  காணக் கண் கோடி வேண்டும்.  ஆரத்தி எடுக்கும் போது பார்த்தால் பெருமாள் நம்மைப் பார்த்து புன்னகை புரிவது போன்ற தோற்றம்.  நேரில் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.  திருப்பதி பெருமாளை விட உயரம் மிக அதிகம்.  மிகவும் கம்பீரம்.

  சன்னதிக்கு வெளியே மலையின் ஒரு பகுதியில் பெருமாள் பாதம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்கு அவசியம் தர்சனம் செய்ய வேண்டும்.
அங்கு நின்று பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு, கம்பீரமான தோற்றம் காணலாம். 

   முன்பு மலைக்குப் பின்புறம் ஓடையில் மணல் நிறைய இருக்கும்.  மணலில் நடந்து செல்வது தனி அனுபவம்.  இப்போது  மணல் எல்லாம் எடுத்து மேடாக்கி விட்டார்கள்.  இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையாக இருக்கிறது.   

 உட்பக்கங்களிலும் மண் தோண்டி ஆழப்படுத்தி விட்டார்கள்.  இங்கு உள்ள செழுமை போய் விட்டது.  வேதனையாக இருக்கிறது.இந்த மலையைப் பாருங்கள்.  வெட்டிக் கரைத்து விட்டார்கள்.


திருப்பதிக்கு நேர்ந்து செல்ல முடியாதவர்கள், காணிக்கை அங்கு சென்று செலுத்த முடியாதவர்கள் இங்கு செல்லலாம், செலுத்தலாம் என்பது ஒரு நம்பிக்கை.  இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நல்ல கூட்டம் இருக்கும்,  மற்ற மாதாந்திர சனிக்கிழமைகளிலும் நல்ல கூட்டம் இருக்கும்.  எல்லா சனிக்கிழமைகளிலும் வரும் பக்தர்கள் இருக்கிறார்கள்.  சனிக்கிழமைகளில் காலை ஐந்து மணிக்கு சன்னதி திறந்து விடுவார்கள்.  சாலியர் சமுதாயத்திலிருந்து – குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் வருவார்கள்.  அவர்கள் மலை ஏறும் வேகத்தை பார்த்தால் நம்மை ஆச்சரியப்பட வைக்கும், வெட்கப் பட வைக்கும்.  ஒவ்வொரு வாரமும் இந்த மலை ஏறி சென்றால் எந்த நோயும் நம்மை அணுகாது.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு தொடர்ந்து வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பெருமாளை தரிசனம் செய்து விட்டோம்.  கீழே இறங்கி வருகிறோம்.  வரும் போது சற்று படி இறங்கிய உடன் வலது புறத்தில் உட்புறத்தில் அலர்மேல் மங்கை சன்னதி சிறு வடிவக் கோவில் ஒன்று இருக்கிறது.

  
அதற்கு கவுரவ நாயுடு வகையினர் தொண்டு புரிகிறார்கள்.  தரிசனம் செய்பவர்களுக்கு ஒற்றை நாமம் அணிவித்து விடுகிறார்கள்.  நாம் திருவண்ணாமலை சென்றதுக்கு அடையாளம். இங்கு பொங்கல் வைப்பதற்கு இட வசதி இருக்கிறது.  பொங்கல்  வைப்பவர்கள் இங்கு பொங்கல் வைக்கிறார்கள்.

வெளியே வருகிறோம்.  சில படிகள் இறங்கி இடது பக்கம் திரும்பினால் ‘வேணு கோபால சாமி திருக்கோவில் இருக்கிறது.
  முன்பு சின்ன சன்னதியாக இருந்தது.  இங்கு பெருமாள் குழல் ஊதி நிற்கும் அழகு தோற்றம்.  சுற்றிலும் நிறைய ஓவியங்கள், தசாவதார ஓவியங்கள் இருக்கின்றன.  தரிசனம் செய்து விட்டு இந்த கோவிலிருந்து படிக்கட்டுகள் வழியே இறங்கினால் கோனேரி அடிவாரத்திற்கு சென்று விடலாம்.


  இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்று  மாலை கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

  முன்பு திருவண்ணாமலை வந்தால் சாலையின் இரண்டு பக்கங்களிலும் விவசாயம் இருக்கும்.  பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.  இப்போது சாலை வசதி நன்றாக இருக்கிறது.  இரு பக்கங்களிலும் முழுவதும் செங்கல் சூளைகள், ஒரே புகை மயம், மூச்சு திணறுகிறது.  காலங்கள் மாறுகின்றன.  காட்சிகளும் மாறுகின்றன.


  இந்த பதிவு நிறைவு செய்வதற்கு நிறைய பேர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.  இந்த பதிவை எழுத, புகைப்படம் எடுக்க, எல்லா முயற்சிகளிலும் நிறைய தடைகள் ஏற்பட்டன.  அனைத்தும் மேலும் சிறப்பு சேர்க்கத்தான் போலும்.  புகைப்படம் எடுக்க சென்ற அன்று காமிராவில் பாட்டரி சக்தி தீர்ந்து விட்டது.  எனவே அடுத்த வாரம் செல்லலாம் என்று தள்ளி போட்டோம்.  மறு வாரம் எதிர்பாராத விதமாக எனது அருமை மகன் ராஜவேல் விடுமுறைக்கு சென்னையிலிருந்து வந்து விட்டான்.  எனது மன ஓட்டத்திற்கு ஏற்ப அருமையாக எடுத்திருக்கிறான். நன்றி ராஜவேல்.

 அடுத்து, முன்பு ஜிமெயிலில் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றினோம்.  பகுதிகளை ஒழுங்கு படுத்துவதில் சிரமம் இருந்தது.  அதற்கும் ஒரு தீர்வு கிடைத்து விட்டது.  ‘அழகி நிறுவி வைத்திருந்தேன்.  அதை உபயோகிப்பதில் தெளிவு இல்லை. 
 பதிவுலகில் எனக்கு கிடைத்த அருமை மகன் திரு ராம்குமார் (சிவகாசிக்காரன் பதிவு) இகலப்பை நிறுவி தருகிறேன் என்று வந்தார்; நிறுவினார்; அதில் ஏதோ சிக்கல்.  தீர்வு அழகியில் கிடைத்து விட்டது.  எப்படி தட்டச்சு செய்வது என்று எனக்கு கற்று கொடுத்து விட்டார் (சுவாமி நாதனோ). நன்றி ராம்குமார்.

  திருவண்ணாமலை பற்றி எழுத என்னை நினைவு படுத்தி ஊக்கப்படுத்தி கொண்டிருந்து திரு ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கும், திரு கென்யா ராகவன் அவர்களுக்கும் மனப்பூர்வ நன்றி.
  ஆங்கிலத்தில் திருவண்ணமலை பற்றி ஒரு பதிவு இருக்கிறது.  அதன் இணைப்பு: http://nachiarpatti.blogspot.com/அதிலிருந்து தான் இதன் முகப்பு படத்தை இணைத்திருக்கிறோம்.  அவர்களுக்கு மிக்க நன்றி.



இந்த பதிவிற்கு நிறைய விபரங்கள் கொடுத்து, நேரில் விளக்கம் சொல்லி அவர் எழுதிய ‘தென் திருப்பதி திருவண்ணாமலை பிரசுரமும் கொடுத்து உதவிய  எங்கள் ஊர் எழுத்தாளர் திரு எஸ்.எஸ்.மணியம் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
இந்த பதிவு பிரசுரமாகி திரும்பவும் எனது தவறுதலால் டிராப்டுக்கு வந்து விட்டது.  சில திருத்தங்கள் செய்து இன்று புரட்டாசி 3வது கிழமை என்பதால் மறுபடியும் வெளியிட்டிருக்கிறேன்.  

                         மிக்க நன்றி.