புதன், ஜூன் 13, 2012

நடைப்பயிற்சி பற்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் பதிவு


நடைப்பயிற்சி பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன்.  
Profile Picture
கவிஞர் திரு வதிரி சி ரவீந்திரனின் கவிதைத் தொகுப்பில் இருந்த நடைப்பயிற்சி பற்றிய ஒரு கவிதையை மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதித்த டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
  நட்புக்கு எல்லையில்லை.
நடைப் பயிற்சி என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள் அற்ற  ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.

எந்த வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி.  தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில் வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது.  இவை எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம்.  தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றோட்டம் கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.
அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே வேண்டியதில்லை.  நீங்களாகவே செய்யக் கூடியது.
அத்தோடு எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.
இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.

·         குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.

·         குருதியில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.

·         பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்


·         நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.

·         அதிகரித்த எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.

·         மனதில் அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.

·         உடல் உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.

அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்‘ கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.  இதில் ஒரு கவிதை நடத்தல் பற்றியதாகும்

தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை இனிதே சொல்கிறார்.
வேறென்ன செய்வர்..



தொடர்ந்து சொல்கிறார்

 கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும். நடையினில் இல்லை.” என்கிறார்.
பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல கவிதைத் தொகுப்பாகும்.
அருமையான கவிதை.
இருந்த போதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு உடன்பாடு  இல்லை.
“நடத்தல் என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.
அல்ல.  அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான முதற்படி என்பேன்.
அதனால் தான் இப்பொழுது நடப்பவர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் இளைஞர்களும் கூட.
ஆம்.  நடைப் பயிற்சி அனைவருக்குமானது.  நலமான உடலைக் கொடுக்கும்.

இனிமையான கவிதையையும்,  இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத்த நண்பர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.






















திங்கள், ஜூன் 11, 2012

எனது மகள் திருமதி ஜோஸ்பின் அவர்களின் பத்மநாபபுரம் அரண்மனை பற்றிய பதிவு

முகநூல் எனக்கு கொடுத்த அருமையான கொடை எனது மகள் திருமதி ஜோஸ்பின் பாபா.  அவர்களது அறிமுகம் வித்தியாசமானது.

  எனக்கு கொழும்பு டாக்டர் திரு முருகானந்தம் அவர்கள் முகநூல் நண்பர்.  அவர் முகநூலில் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களின் பதிவை புகழ்ந்து எழுதி படிக்கும்படி கேட்டிருந்தார்.  அந்த பதிவு தான் பத்மநாபபுரம் அரண்மனை.  அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
அருமையான பதிவு.
நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நன்கு, நிறைய விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி அம்மா.
வாழ்த்துக்கள்.
இந்த பதிவு மூலம் தான் எங்கள் நட்பு தொடர்ந்தது.
 
நான் நேரில் பார்த்ததை விட இவர்கள் அருமையாக, விபரமாக விளக்கியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியின் பேரில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.  மிக்க மகிழ்ச்சி.  எனது மகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

இனிமேல் திருமதி ஜோஸ்பின் பாபா உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார்.

புலியூர்குறிச்சியில் இருந்து 4  கிலோ மீட்டருக்குள், அல்லது கன்னியாகுமரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace  வந்து விடலாம். 
 திருவனந்தபுரம் மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது.  தற்போது கேரளா அரசுவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது.  அங்கு கட்டணம் 40 ரூபாய்.   அரண்மனை நிலைகொள்ளும் தாலுக்குக்கு (Toll)  செலுத்த வேண்டும்.   பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர்.  அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்திருந்தது.  






கேரளத்து சேச்சிமார் கன்னத்தில் கை கொடுத்து தமிழக அம்மாக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.



ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு மேலும் சாதாரண பெண்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்று  மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.

என் மகனிடம் வுட் ஒர்க்(wood work) அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்டினால் ஒட்டியுள்ளதை சுட்டிக் காட்டினான்.  டிக்கட்டை காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம். சேலம் பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு என "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்க்கோ, போய்க்கோ என்று பொறுமை இழந்து வழி விட்டார்.  தமிழன்னா சும்மாவா?

அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். 
  சிலர் மலையாள அன்போடு கொஞ்சும் தமிழில் விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும் விரட்டி விட்டு கொண்டிருந்தனர்.
  அரண்மனை வரவேற்பறை கருப்பட்டி, சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது 
 என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண் விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்கிலத்தில் பக்கத்தில் நின்றே ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.

விரும்பும் திசையில் திருப்பி வைக்க கூடிய ஒரு தொங்கும் விளக்கும் அதன் அடியில் கல்லால் ஆன பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதையும் காட்டி கதைத்து கொண்டிருந்தனர். நம் தமிழ் ஆசாமி ஒருவர் இவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெளிவு படுத்த விரும்பி விளக்கின் மேல் கை வைத்ததும் அப்பெண் நீங்கள் தொடக்கூடாது இது பழமையானது ஆசாரமானது என்று கோபம் கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக தொடுவதை தடுத்தார். அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டப்பட்டு மார்த்தாண்ட ராஜா காலத்தில் புதுப்பிக்கப் பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்லப் பணித்தனர்.

பின்பு ஒரு இடுங்கிய படிகள் வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர்.  அரசன் தர்பார் மண்டம்,  குறைகேட்கும் அறை,  அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி,  கட்டில்,  மஹா ராணியின் சாப்பாட்டு அறை,  அவருடைய கழிவறை  என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம்.  குளிக்கும் அறையில் கல் தொட்டிகள் , அரைக்கும் அரைகற்கள்,  எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்க பட்டது.   அரசி தன் கணவர்-மன்னரை தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து விட்டு ஆலயத்திற்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக மேலும் எளிமையான அழகுணர்ச்சியுடன் செய்யப் பட்டிருந்தது.
 அம்மா ராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் அம்மா ராணி என்றால் யார் என்று தன் நியாயமான சந்தேகத்தை எழுப்பியதும் ராஜாவின்றே அம்மா என்று அவர் பதில் உரைத்தவுடன் ஓஹோ ராஜா மாதாவா என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.

ஒரு மண்டபத்தில் தரை செம்பருத்தி மருதாணி இலையால் சாயம் பூசப்பட்டு சிவப்பு  நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்தது.  அதன் ஒரு தூண் வாஸ்துப் படி பலாமரத்தில் செய்யப் பட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப் பட்டதாகவும் கூறினர்.
நம்ம சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு ஆகா அற்புதம் நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச வேறு ஒரு பெண் ஆமாம், இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது என்று பரவசப்பட்டு தன் மதிப்பெண்ணயும் பதித்துக் கொண்டார்.  விளக்கி கொண்டிருந்தவர் அப்படி எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாடு பக்கம் பல வீடுகள் இதே போல் கலை நயத்துடன் உள்ளது தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.


மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர்.  கட்டிலை பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்துக் கொண்டிருந்தார். கீழ் மாடியில் விருந்தினர்,  மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும், நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் செல்ல இயலாது என்று உருக்கமாக கூறினார்.  127 அறைகளில் 60 அறைக்குள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்ற அறைகள் என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

சுற்றுப்புறம், உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது மட்டுமல்லாது
 பழமையான முல்லை, செம்பருத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு இட்டு செல்கின்றது என்றால் மிகையாகாது.

திருவனந்தபுரம் அரச பரம்பரை பிரிட்டிஷாருடன் இணக்கத்தில் கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி தருகின்றது.  வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர்.  

தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில் நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல் அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் என தெள்ள தெளிவாக எடுத்துரைத்தது.



மேலும் மகா ராணிகள் மன்னர் தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர் என்பதும் ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை
 என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது. 
 பதவிக்கு என அவர்கள் குடும்பத்திற்குள் சண்டையிட்டு மடிந்ததும் ராஜ குடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய  அரண்மனை வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.



அடுத்தது எங்கள் பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில் எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல் விட்டு விடுவேனா!!!!

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.
















வெள்ளி, ஜூன் 08, 2012

எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள்


முகநூல் எனக்கு தந்த மற்றுமொரு கொடை எனது அருமை மகள் திருமதி தீபா நாகராணி ராமமூர்த்தி.
  அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள்.  எனது முகநூல் நண்பர் மாமனிதர் திரு ஈரோடு கதிர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது 
அவருடன் பேசும் போது எனக்கு திருமதி தீபா நாகராணியை அறிமுகப்படுத்தினார்கள்.  அதன் பின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு குடும்பத்திடன் வந்தார்கள்.
  அவர்கள் முகநூலில் இருக்கிறார்கள்.  அருமையாக பயணக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.  இது அவர்கள் நாகர்கோவில் வந்த அனுபவம் – முகநூலில் எழுதியது.  நான் அவர்களை பதிவு எழுத வரும்படி வேண்டினேன்.  அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  எனவே அவர்கள் நாகர்கோவில் அனுபவங்களை எனது பதிவில் வெளியிடுகிறேன்.  

இனி திருமதி தீபா நாகராணி பேசுகிறார்.

மாடு மேச்ச மாதிரியும் ஆச்சு,  மச்சினனை பார்த்த மாதிரியும் ஆச்சு" என்ற பழமொழிக்கேற்ப ஓரிரு முறை மட்டும் பேசிப் பழகியுள்ள எனது கணவர் திரு ராமமூர்த்தியின் தோழியின் திருமணத்திற்காக ஏப்ரல்  18 ஆம்  தேதி  நாகர்கோவில் சென்று அப்படியே திருவனந்தபுரத்தையும்  சுற்றிப் பார்க்க கிளம்பிட்டோம்.

நாகர்கோவிலில் நிறைய இடங்களுக்குப் பின்னால் ஜங்ஷன் ஒட்டி கொண்டிருக்கும்.  செட்டிக்குளம்  ஜங்ஷன்,  கோட்டாறு ஜங்ஷன் என்று. ஒரே ஊரில் இத்தனை ஜங்ஷன்களா  என்று குழம்பி,  உள்ளூர்வாசியிடம் கேட்ட பொழுது,  அவரின் பதில்,  நகர் என்ற அர்த்தத்திலேயே இந்த ஜங்ஷன் உபயோகிக்கப்படுகிறது என்று விளக்கினார்.

நாகர்கோவிலில் பெண்கள்  கேரளப் பெண்களைப் போலவே தளர்வாய் தலை வாரி இருந்தனர்.  பெரும்பாலும், வயிற்றைத் தொடும் டாலர் சங்கிலிகளை அவர்கள் அணிந்திருந்தது வித்தியாசமாகப் பட்டது.

பார்க்கும் ஆண்களில் பாதி பேருக்கும் மேல் வேட்டி அணிந்திருந்தனர்.   ஒரு மாவட்டத்தின் தலை நகரில்,  இது போன்று பார்ப்பது அரிது.

கூர்ந்து கவனித்தால் ஒழிய,  அம்மக்கள்  பேசும் மொழி தமிழ் என்பது தெரியாது.  கேரள ராகத்துடன்  சிற்சில மலையாள வார்த்தை கலப்புடன் வசீகரிக்கிறது நாஞ்சில் வட்டார வழக்கு.

சென்ற முதல் நாள்,  திருமண உணவு விருந்தில் - ரசம் முதல் பாயசம் வரை, அனைத்திலும் சுக்கு சேர்க்கப் பட்டிருந்தது.  செரிமானத்திற்கு நல்லது என்றாலும்,  அந்த நேரம் சாப்பிட முடியவில்லை.   'சுக்குக்கு மிஞ்சின சொக்குப் பொடி இல்லை' என்பதை கடை பிடிக்கும் சமையல் போல.   படு இனிப்பாக பரிமாறப்பட்ட பருப்பு பாயாசம்,  அதன் மேலேயே , இனிப்பற்ற பால் பாயாசம் ஊற்றி சென்றது வித்யாசமாக இருக்கிறதே என்று எண்ணி முடிக்கும் வேளையில்,  என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, அதில் இனிப்பு பூந்தியை தூவி சென்றனர்.  அனைத்தையும் கலந்து சாப்பிட வேண்டுமாம்.
ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு  அறைக்கு திரும்பினோம்.

நாங்கள் தங்கி இருந்த விடுதியில்,  ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரே ரூம் சர்வீஸ்களில் ஈடுபட்டது மனதை சங்கடப் படுத்தியது.

சமமான சாலைகளிலேயே பயணப் பட்ட எனக்கு,  அரை கிலோமீட்டர் கூட சமமில்லாத, ஏற்ற இறக்கம் நிறைந்த சாலைகள்,  அதில் ஒழுங்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சீராக செல்லும் வாகனங்கள் வியப்பேற்றியது.   இன்னொரு குறிப்பிடப்பட்ட வேண்டிய அம்சம், காணும் வீடுகள் அனைத்திலுமே ஏதேனும் செடிகள்,  மரங்கள் சூழ காணப்பட்ட பசுமை சூழல்.   ஒவ்வொரு வீட்டிலுமே, மா, பலா, தென்னை மரங்கள், குறைந்தபட்சம் இருந்தன.  ஊர் மொத்தமும் வெக்கை குறைவாக இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அடுத்த நாள், காலை ஆறு மணிக்கெல்லாம், வாடகைக்கு அமர்த்திக் கொண்ட வண்டியில் கிளம்பி,  திற்பரப்பு அருவிக்கு அதீத எதிர் பார்ப்போடு சென்றோம்.  நாகர்கோவிலிருந்து நாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  ஒரே மாதிரியான வேகத்துடன் குறைவான அளவு உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர், பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. 
 கீழே  போய் நின்றவுடன், சிறு சிறு கற்களை தாங்குகிற வலியில் எறிந்தால் ஏற்படும் உணர்வு, களைப்பை களைவது போல உணர்வை தந்தது.  கூட்டம் மிக குறைவாக இருந்ததால், அதிக நேரம் அருவியின் நீரை மேலே வாங்கி கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது.

அங்கிருந்து கிளம்பி மாத்தூர் தொட்டிப்பாலம் அருகில் செல்லும் பொழுதே வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
 தரையில் இருந்து முப்பது மீட்டர்  உயரத்தில் அமைந்திருந்த ஒன்றரை கிலோமீட்டர் நீளமான பாலம்,  சுற்றில் நிறைந்து காணப்படும் மரங்கள்,  மலைகள்,  கீழே இருந்த பூங்கா என்று வேறு ஒரு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வை அளித்தது.

திருவனந்தபுரம் நோக்கி சென்ற வழி எங்கும் ரப்பர் தோட்டங்கள்,  இடை இடையே வீடுகள், குளிர்ந்த காற்று என்று அனுபவித்துக் கொண்டே சென்ற சாலையில்,  ஏகப்பட்ட திருப்பங்கள்,  வளைவுகள், சில இடங்களில் மிக குறுகலான சாலைகள் என்று திக் திக் பயணத்தை சாமர்த்தியமான ஓட்டுனரால் பாதுகாப்பாகத் தொடர்ந்தோம்.

மார்த்தாண்டத்திலிருந்து சாலைகள் அகலமாக இருந்தன,  அதே ஏற்ற இறக்கங்களோடு இருந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த பல விதமான கடைகள், கட்டிடங்கள்  போன்றவை நாகர்கோவிலுக்கு அடுத்த பெரிய ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்பதை சொல்லின.

எல்லைப் பகுதியில் இருக்கும் இடங்களில் உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று,  அங்கு வசிக்கும் மக்கள்  குறைந்தபட்சம் இரு மொழியில் திறமைப் பெற்றவர்களாக இருப்பர்.   களியக்காவிளை என்ற பகுதியில் பல இடங்களில் ஆங்கிலத்தையும் சேர்த்து மும்மொழிகளில் விளம்பரப் பலகைகள் இருந்தன.  குழித்துறை என்ற இடத்தை தாண்டியதும், கேரளாவின்  பாரசாலா ஆரம்பாகிறது.  இது வரை தமிழுக்குப் பழகி கொண்டிருந்த கண்கள் சடாரென மலையாளத்தை சந்திக்கின்றன, சில கிலோமீட்டர்கள் தூரத்தில், அரைகுறையாக அறிந்திருக்கும் மொழியை, எங்கு நோக்கினும், சரி பார்த்துக் கொள்வது நம்மில் அநேகருக்கு இருப்பது போல,  கீழே இருந்த ஆங்கிலத்துடன் தவறை சரி செய்து கொண்டே திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு சென்றோம்.

மிருக காட்சி சாலையில் அதிக கூட்டம்,  உள்ளே செல்ல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை, ஆனால், இவ்வளவு தூரம் வந்து விட்டு, இதனைப் பார்க்காமல் போனால் நன்றாக இருக்காது என்ற ஒரே காரணத்திற்காகவே உள்ளே போனேன்.  விரிந்த பரப்பில், சீரான இடைவெளியில், காட்டில் இருப்பது போன்ற அமைப்புடன், விலங்குகளின் அரிய வகைக்கு ஏற்ப அமைக்கப் பட்டிருந்த கூண்டுகளின் வரிசையில் சிங்கம், புலி போன்றவை கடைசியில் இருந்தன.
IMG_2379.jpg

IMG_2364.jpg

IMG_2359.jpg


கூண்டில் அடைபட்டிருந்த புலி ஒன்று சில நிமிடங்கள்  எங்களுக்காக பூனை நடை (Cat Walk) நடந்து போனது, பிரத்யேக பயிற்சி இல்லாமல், வெகு அழகாக.

உள்ளே பாதி தின்று போட்ட இறைச்சியின் எச்சம் ஓரத்தில் கிடந்தது.  என்ன சிங்கம்,  புலி என்று இருந்து என்ன செய்ய, மொத்த சுதந்திரமே இந்த ஐம்பது அடிக்குள் தான் அதற்கு என்று எண்ணிய பொழுது பரிதாபமே மேலோங்கியது.

அப்படியே சற்று தொலைவு சென்றால் வரவேற்கிறது வேலி பார்க் ....
சிற்பங்கள்,  பூச்செடிகள், தோட்டத்தால் ஆனது.   நடந்தால் கடல் மணல் கால் எங்கும் பரவுகிறது, நேராகச் சென்றால் படகு சவாரி செல்லலாம், இடது புறத்தில் கொஞ்சம் நடந்தால், சிறுபாலம், அதனை கடந்தால், மிகக்குட்டி தீவு, அங்கு குதிரை சவாரி உட்பட, கடற்கரைக்கு உரிய அனைத்து அம்சங்களும் அனுபவிப்பதற்கு உண்டு.

சீரற்ற சாலைகள், சீரான கட்டிடங்கள்,  பார்க்கும் இடமெல்லாம் மரங்கள் செடிகள் என்றுத் தொடர்ந்த பயணத்தின் அடுத்த கட்டமாக கோவளம் கடற்கரை;
IMG_2394.jpgமிக அழகாக இருந்தது.  கிட்டத்தட்ட ஒரு  நெட்டு குத்தலான பாதையில் இறங்கினால் அடையலாம். (ஓட்டுனர் அந்த வழியில் தான் சென்றார்)  அங்கு ஒரு புறம், பாறை, மரம், செடி, மலை உடன் எல்லையற்ற கடலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் அலைகள், குதித்து ஆட்டம் போடும் மக்கள் என்று வண்ணமயமாக இருந்தது. லேசாக தூறல் ஆரம்பிக்க, சட்டென்று மாறிய வானிலை அனுபவிக்க ஆரம்பித்தோம்.

கேரளாவில் நிறைய இடங்களில் காணப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமான விளம்பரப் பலகைகள், கொடிகள்.  சிறிய அளவில் காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களும் காணப்பட்டன.  கோவளம்  கடற்கரை செல்லும் வழியில் கார்ல் மார்க்ஸ் சிலை.   இவை எல்லாமே நாம் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நினைவுபடுத்தின. 

திரும்பிய சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட சுவரொட்டிகளில், மம்மூட்டி, மோகன்லால், ப்ருத்வி ராஜ், கலாபவன் மணி உள்ளிட்டோருடன், நம்மூர் சசி குமாரும் சிரித்து கொண்டிருந்தார்.   ஒரே ஒரு போஸ்டரில் மட்டுமே அழகான நடிகையின் படம் இருந்தது, யார் அது என்று உற்று நோக்கும் பொழுதுதான் தெரிந்தது, அது நடிகர் திலீப் பெண் வேடமிட்டு நடித்த படம் என்று.  என்ன ஆயிற்று கதாநாயகிகளுக்கெல்லாம்? ஊர், உலகத்துக்கே (சிறந்த!?) கதாநாயகிகளை வழங்கிக் கொண்டிருக்கும் கேரளாவில்,  அவர்கள் ஊரில் வெளியாகும் படத்தில் ஒருவரைக் கூட காணவே காணோமே... எல்லாரும், கோலி வுட், பாலி வுட் , என்று பரபரப்பாக இருக்கின்றனரோ?  

கோவளம் கடற்கரையில் கண்ட அரபிக்கடலும் சரி,  கன்னியாகுமரியில் பார்த்த இந்து மகாசமுத்திரமும் சரி, சென்னையில் காணும் வங்காள விரிகுடாவும் சரி,  நீர், குணம் எல்லாம் ஒன்று தான்.  பேர் தான் வேறு வேறு வைத்திருக்கிறோம்.  எந்த மாநிலத்தில், நாட்டில்  இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒன்று தான்.
நீராய் இல்லாமல் போனதாலோ,என்னவோ பல காரணிகளால் மாற்றப்பட்ட மக்களின் மனங்கள்.

மகிழ்ச்சியாக/வசதியாக இருப்பதற்காக என்று  பிரித்து வைக்கப்படும்  சில  விஷயங்கள், சில நேரங்களில்  சங்கடத்திலே கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன.  சற்றே கனத்த இதயத்துடன் ஊர் திரும்பினேன்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.
































புதன், ஜூன் 06, 2012

வெள்ளி மறைப்பு நிகழ்வுகள் – பாகம் 1


பேராசிரியர் திருமதி  மோகனா அவர்களின் வெள்ளி மறைப்பு நிகழ்வு – பாகம் 1 – கட்டுரையை  அவர்களின் அனுமதியின் இன்று பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.  பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.
வரலாற்றின் பரிமாணத்தில்  பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள்..!.. Historical episodes of transit of venus..! ..PART I
                                               --பேரா.சோ. மோகனா 
 

வெள்ளி மறைப்பு  என்றால் என்ன?
  வானில் வளைய வரும் வான் பொருட்களான சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று தொட்டு விளையாடுகின்றன. அவற்றின் உருவம் பெரிதாக இருந்து,  ஒன்றை ஒன்று முழுமையாக மறைத்தால், அது கிரகணம்.  மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம். 

வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகணம் போலத்தான்.  எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும்,  சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே,  வெள்ளி மறைப்பில்,   இதில்  வெள்ளி   சின்ன கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில்  குறுக்கு மூலை பாய்ந்து ஓடும்.  இதனை நாம் பார்க்க  முடியும்.  மறைப்பு என்பது குறைந்தது 6  மணி நேரம் நடைபெறும்..   வெள்ளி மறைப்பு என்பது சிறிய கடுகு ஒரு பெரிய தட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடுவதைப் போலிருக்கும். இந்த வெள்ளி மறைப்பை கவனித்ததின்  மூலமாகத்தான், இடமாறு தோற்றப்பிழை கருத்தின்  அடிப்படையிலேயே விஞ்ஞானிகள், சூரியனுக்கும், பூமிக்கு இடையிலுள்ள தொலைவைக் கணிக்கப்  பயன்படுத்தினர் 

வெள்ளி யார்..?










வெள்ளி சூரியனை இரண்டாம் இடத்திலும், பூமி மூன்றாம் இடத்திலும் இருந்து சுற்றுகின்றன.  இவை இரண்டும் அளவு, ஈர்ப்புத்தன்மை, வேதிப்பொருட்கள், மற்றும் உருவம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட சம அளவுள்ளவை.  எனவே வெள்ளியை பூமியின் சகோதரி என்றும் குறிப்பிடுவதுண்டு. வெள்ளிக்கு துணைக் கோள் கிடையாது.

வெள்ளி கோள் ரோமானிய நாட்டில்,  அழகு தேவதை , அன்பின் கடவுள், உற்பத்திக் கடவுள், வளமைக் கடவுள், வெற்றிக் கடவுள்  என்று அழைக்கப்படுகிறது. மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும் ஒரே கோள் வெள்ளி மட்டுமே.  இதன் நடுக்கோட்டில்  சுற்று வேகம்,   மணிக்கு 6.5 கி.மீ . ஆனால் பூமியில் நில நடுக்கோட்டின் சுற்று வேகம், மணிக்கு 1,670  5 கி.மீ .இதன் நிறை பூமியைப்போல   0.815 மடங்கு ((0.815 Earth masses), பூமிக்கும்  மட்டுமே. சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் (ஒரு வானவியல் அலகு) போல, இது சூரியனிலிருந்து 0.7 வானவியல் அலகு தொலைவில் உள்ளது.  வெள்ளியின் விட்டம், 12,092  கி.மீ.   வெள்ளியின் மையத்தில் சுமார் 3,000  கி.மீ ஆரத்துக்கு இரும்பும், (Venus has an iron core about 3,000 kilometers, in radius.) சிலிகேட்டும்  உள்ளது. இதன் வளிமண்டலம், பூமியை விட  90 மடங்கு மிகவும் அடர்வாக உள்ளது.    வெள்ளியின் மேற்பரப்பு எரிமலைப் பாறைகளால் ஆனது. வளிமண்டலத்தில்  96.5%  கரியுமிலவாயுவே உள்ளது. மீதி  3.5% நைட்டிரஜன். சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் வெள்ளிதான். 

ஆண்டைவிட அதிக காலம் கொண்ட நாள்..!



 வெள்ளியின் விட்டம் 12,092  கி.மீ. (650 km less than the Earth's)  /0.949 9 Earths ) சந்திரனை (3476 km /(0.273 Earths )/விட 4 மடங்கு அதிகம்.  ஆனால் வெள்ளி சந்திரனை விட மிகத் தொலைவில் (356400 - 406700 கி.மீ)  உள்ளதால்  பார்வைக்குச் சிறியதாகத் தெரிகிறது. மேலும் வெள்ளி மிக  மிக மெதுவாகவே  பயணிக்கும்.  சூரிய குடும்பத்தில் மெதுவாக நகரும் கோள் இதுதான்.  இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள்.  அதாவது தன்னைதானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 244 நாட்கள் ஆகின்றன.  ஆனால் சூரியனை ஒரு கோள் சுற்றி வரும் காலம் என்பதே ஓர் ஆண்டும்.  இங்கே வெள்ளி சூரியனைச் சுற்றிவர  224.7 பூமி நாட்கள் ஆகின்றன.  எனவே வெள்ளியின் ஒரு நாள் என்பது ஓர் ஆண்டைவிட அதிகம்.   வெள்ளிக் கோளில், பகல் நேரம் 122 நாட்கள்;  அதன் இரவும் 122 நாட்கள்.  எனவே இதன் ஒரு வருடம் என்பது ஒரு நாளைவிட அதிகம்.

எப்போது வெள்ளி மறைப்பு  நிகழும்?


வெள்ளி மறைப்பு என்பது அறிவியலில் கணிக்கப்படும் வானவியல்   நிகழ்வுகளில் மிகவும் அரிதானதும் அற்புதமானதும் கூட.  வெள்ளி கோள் சூரியனை, 224.7  நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது.  584 நாட்களுக்கு ஒரு முறை,  பூமிக்கு அண்மையில்  வெள்ளி வருகிறது. இருப்பினும் எல்லாக் காலங்களிலும், சூரியனில் வெள்ளி கோள் மறைப்பு ஏற்படுவதில்லை. இது வெகு அரிதானது. வெள்ளியின் பாதை 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. இப் பாதை  பூமி சூரியனை வலம் வரும் தளத்தினை  ஜூன் முதல் வாரத்திலும் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் கடக்கும். அப்போது  வெள்ளி மறைப்பு நடக்கும். 243  ஆண்டுகளில் வெள்ளி இடைமறிப்பு, 8 ஆண்டு இடைவெளியில் ஜோடியாக ஏற்படும். அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5  ஆண்டு காலம் அல்லது 105.5 ஆண்டு கால இடைவெளியில் ஏற்படும் இந்த நிகழ்வு ஒவ்வொரு 243 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சுழற்சி.  இதில் ஒவ்வொரு 8 ஆண்டுக்கு ஒரு முறையும் ஜோடி வெள்ளி மறைப்புகள் வரும். இந்த இரட்டை வெள்ளி மறைப்பு என்பது நீண்ட இடைவெளியில் அதாவது 121 .5 ஆண்டுகள் மற்றும் 105 .5 ஆண்டுகளுக்கு  ஒரு தடவை நிகழ்கிறது. இப்போது 2012, ஜூன் 6 ம் நாள் வெள்ளி மறைப்பு/இடை நகர்வு நிகழ்வுள்ளது. இது போலவே ஒரு வெள்ளி மறைப்பு  2004 , ஜூன் 8 ம் நாள் ஒன்று நிகழ்ந்தது.  இதற்கு முன், இது போல ஜோடி வெள்ளி மறைப்புகள், 1874 , டிசம்பர் மற்றும் 1882 டிசம்பரில் ஏற்பட்டன.. அடுத்து இனி 2012 க்குப் பிறகு,  இதைப் போன்ற ஜோடி வெள்ளி மறைப்புகள்  , 2117 டிசம்பர் 10 மற்றும் 2125 டிசம்பர்  8 ம் நாள் வந்து போகும்.  எனவே இதனைக் கணக்கிட்டால் ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14-18 முறை வெள்ளி மறைப்பு நிகழும்.  ஆனால், புதன் மறைப்பு என்பது 100 ஆண்டுகளில் 13-14 வருகை புரிகிறது.





 During the six millennium period 2000 BCE to 4000 CE1,  Earth experiences 81 transits of Venus across the Sun.  These events can be organized into two groups:


All Transits =  81  = 100.0%
             June (Descending Node2) =  44  =  54.3 %             December (Ascending Node3) =  37  =  45.7 %
When a transit of Venus occurs, a second one often follows eight years later. This is because the orbital periods of Venus (224.701 days) and Earth (365.256 days) are in an 8 year (2922 days) resonance with each other. In other words, in the time it takes Earth to orbit the Sun eight times, Venus completes almost exactly thirteen revolutions about the Sun. As a result, Venus and Earth line up in the same positions with respect to the Sun.  Actually the two orbital periods are not quite commensurate with each other since Venus arrives at the eight year rendezvous about 2.45 days earlier that Earth. After the third eight-year cycle, Venus arrives too early for a transit to occur. 

     The next transit season occurs either 105.5 years or 121.5 years later at the opposite node of Venus' orbit. Once again, a pair of transits will often occur separated by eight years. This recurrence pattern of 8 + 105.5 + 8 + 121.5 years can be seen repeating itself in the catalog of Venus transits. An example of the pattern can be seen in the transits of 1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 and 2012. Occasionally, one of the eight year "double-transits" may disappear from the catalog for several centuries because one of them is a near miss. For instance, note the "missing" transits of 1388, 1145, 0902, 0659, 0416, etc..

மனித இனம் எப்போதிலிருந்து வானைக் கவனித்தது?



மனிதன் தோன்றியது முதல் வானைக் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறான்.  வானின் பொருள்கள் அவனுக்கு அதிசயமாகவே இருந்தன. அவனுக்கு சூரியன் என்றோ  சந்திரன் என்றோ பெயர் எதுவும் தெரியாது.  அதே போல மாலை/காலை வேளைகளில் வானில் பளிச்சென்று ஒளி வீசும் ஒரு பொருள் வெள்ளி என்றும் தெரியாது.  ஆனால் இவைகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான்.  பார்த்த விஷயங்களைப் பதிவும் செய்து வைத்திருக்கிறான்.  பழங்கால இந்தியர்கள்,  கிரேக்கர்கள்,  பாபிலோனியர்கள் மற்றும் சீன வான் நோக்காளர்கள் இந்த வெள்ளி பற்றி அறிந்ததுடன், அதன் நகர்வு பற்றியும் பதிவு செய்துள்ளனர்.  காலையிலும், மாலையிலும் தெரியும் வெள்ளிக் கோளை விண்மீன் என்று நினைத்தனர். அதனால் மாலையில்  தெரியும் விண்மீனுக்கு/வெள்ளி கோளுக்கு Hesperus என்றும்,  காலையில் காணப்படும் விண்மீன்/வெள்ளிக் கோளுக்கு Eosphorus என்றும் பெயரிட்டனர். 

காலையிலும்,மாலையிலும் தெரிவது ஒரே கோள்தான் என்ற உண்மையை துல்லியமாய் கணித்த பெருமை கணிதமேதையும், தத்துவஞானியும், வானவியலாளருமான  பித்தாகரசுக்கே போய்ச்சேரும்.

வெள்ளிக் கோள்/சூரிய கிரகணம் எப்போதிலிருந்து பார்க்கப்பட்டது?


குறிப்பிட்ட பழங்கால நாகரிகங்களில் இந்த வெள்ளியின் மறைப்பு வந்து போனது பற்றி எதுவும்  குறிப்பிட்டதற்கான சான்றுகளே இல்லை.  ஆனால் ஆதிகால அமெரிக்க நாகரிகங்களில் குறிப்பாக மாயன் நாகரிகத்தில்  வெள்ளியைப் பற்றி சிறப்பாக பெரிய விண்மீன் மற்றும் வண்டு விண்மீன்(Wasp Star) என்று குறிப்பிடுகின்றனர். வெள்ளியை அவர்கள் குல்குல்கன் (Kukulkán) கடவுள் என்றும் அழைக்கின்றனர்.  மெக்சிகோவின் மற்ற பகுதிகளில் வெள்ளியை குகுமாட்ஸ் (Gukumatz) & க்வெட்ஸால்கோயட்ல் (Quetzalcoatl ) என்றும் சொல்லப் படுகின்றது. டிரெஸ்டன் விதிகள் என்ற மாயன்களின் புத்தகத்தில் மாயன்கள் வெள்ளியின் முழு சுழற்சி (cycle of venus) பற்றியும் அட்டவணைப் படுத்தியும்  இருக்கின்றனர்.  அஸ்டெக் நாகரிகத்தில் மாண்டிசூமா (Montezume)  சூரியன் பற்றிப் பதிவும், வெள்ளியின் வரவுகளை மிகத்  துல்லியமாகக் கூறியுள்ளனர்.  அந்த தலைவர் மாண்டிசூமா, 1518, மே 25 ல், வந்த   வெள்ளி மறைப்பைப்  பார்த்திருக்க வேண்டும் என்றே கணிக்கின்றனர்.  அஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்களில் சூரியன் மற்றும் சூரிய கிரகணம் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.  வானவியல் நிகழ்வுகளைக் கண்டறிந்த போதுதான்,  கணிதம் மூலம் கோள்களின் சுற்றுப்பாதை  பற்றி விவரித்தனர். பின் கோள்கள் சூரிய விட்டம்,  வட்டத்தில் நுழைவதைப் பற்றி ஆராய்ந்தனர்.  முதல் சூரியப் புள்ளியை தொலை நோக்கி கண்டுபிடிக்கு முன்,  இங்கிலாந்தில்  வோர்ஷ்டர்ஷிரின் சகோதரர்,  பிரியர் பிரதர் ஜன என்பவர் 1128, டிசம்பர் 8ம் நாள் பார்த்தார். 

பாபிலோனும் வெள்ளி மறைப்பும்..!





பாபிலோனியர்கள் வானவியல்  பற்றிய  பழமையான பதிவுகளைச் செய்து வைத்துள்ளவர்கள்.  பாபிலோனியர்கள் காலத்தில் 4 வெள்ளி மறைப்புகள் வந்துள்ளன.  மே 20, கி.மு, 1641, நவம்பர் 20, கி.மு. 1520, நவம்பர் 18,  கி.மு. 1512,  மே 23, கி.மு. 1426 என அவர்களின் ஆட்சிக்காலத்தில் வெள்ளி மறைப்புகள் வந்துள்ளன.  இவற்றைப் பார்த்தார்களா, இல்லையா என்பதும் தெரியவில்லை.  ராயல் வானவியல் கழகத்தின் ஒரு பிரிட்டிஷ் பத்திரிக்கையில் ஜான்சன் என்பவர் ஆசிரியர்கள் வெள்ளி மறைப்பைப் பார்த்தார்கள் என்றே குறிப்பிடுகிறார்.  ரெவரெண்ட் சாய்ச் என்பவரும், ஆசிரியர்களின் உடைந்த குயூனிபாரம் களிமண் பலகை உடைந்து கிடைத்தது என்றும்,  அதில் உடைந்த இடத்தில்,  ”வெள்ளிக் கோள் கடந்து சென்றது,  சூரியனை சூரியன் முகத்தைக் கடந்தது”  என்று கூறுகிறார். இதிலிருந்து பாபிலோனியர்கள் கி.மு 1520 களில் சூரியனும், வெள்ளியும் அருகில் வந்ததைப் பார்த்து பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் பாபிலோனியர்களின் வானவியல் பதிவுகளைப் படித்த ஹென்றியும்,  ஜார்ஜ் ஸ்மித்தும்,  வெள்ளி நகர்வு பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் பாபிலோனியர்களின் பதிவில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

வெள்ளி மறைப்புக் காணுவதன் முக்கியத்துவம் என்ன?

 வெள்ளி மறைப்பு என்பது ஓர் அரிதான வானியல் நிகழ்வு,  வெள்ளி நகர்வினால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை இடமாறு தோற்றப்பிழை மூலமும், கெப்ளரின் மூன்றாம் விதி மூலமும் அறிவது என்ற ஒரே குறிக்கோள் தான் இருந்தது.  இதிலுள்ள யுக்தி என்னவென்றால்,  வெள்ளிக் கோள் சூரிய பிம்பத்தில் நுழையத்துவங்கும் நேரத்தையும், அதிலிருந்து வெளியேறும் நேரத்தையும் கணக்கிட்டு, அதிலுள்ள மிக மெலிதான நேர வேறுபாட்டைத் துல்லியமாக  அறிந்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து இவை எவ்வாறு பிரிந்துள்ளன என்பதை அறிவதே.  வடிவியல் மூலம் சாய்கோணம் அறிந்து அதன் வழியே நூலேணியில் ஏறுவது போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்தை  துல்லியமாக அளப்பது தான். 




ஐரோப்பாவில் காணப்பட்ட வெள்ளி மறைப்பு நிகழ்வு..!


 நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolus Copernicus , 1473 -1543) என்ற போலந்து நாட்டு வானவியலாளார் வெள்ளி மறைப்பு  பார்த்திருக்கிறார். ஆனால் அதனை அவர் பதிவு செய்யவில்லை.  பிறகு மற்றொரு வெள்ளி மறைப்பு நிகழ்வு 1526 ல் வந்திருக்கிறது.  அதனையும் கூட கோபர்நிகஸ் பதிவு செய்யாமால், போலந்து அரசனுக்கு வரைபடம் போட்டுக் கொடுப்பதிலேயே தன் காலத்தைக் கழித்திருக்கிறார்.  பிறகு ஜெர்மானிய வானவியலாளர் ஜோஹான்னஸ் கெப்ளர், 1631 , நவம்பர் 7 ம் நாள் புதன் மறைப்பு சூரியனில் நிகழும் என்று சொன்னார்.  அதனைத் தொடர்ந்து அடுத்து டிசம்பர்  மாதம் வெள்ளி மறைப்பு வரும் என்றார்.  ஆனால் 1631 ஏற்பட்ட வெள்ளி மறைப்பினை யாரும் பார்த்ததாக பதிவு செய்யப்படவில்லை.  காரணம் என்னவெனில்,  அன்று ஐரோப்பா முழுமைக்கும் பெரிய சூறாவளி வீசி, சூரியனைக் காணமுடியாமல்  மறைத்துவிட்டது.  ஆனால் அடுத்த வெள்ளி மறைப்பு 1756 ல் வரும் எனத் தவறாகக் கணித்தார் கெப்ளர். 

இருபது வயதில் வெள்ளி மறைப்பு ரசித்த ஜெரேமையா ஹோரோக்ஸ்..!


சூரியனிலிருந்து ஒவ்வொரு கோளும் எத்தனை தொலைவில் உள்ளது  என  17 ம் நூற்றாண்டு வானவியலாளர்கள் கணக்கிட்டனர்.  பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் ஒரு வானவியல் அலகு (an astronomical unit) என்றும் அறியப்பட்டு  கணக்கிடப்பட்டது.  வெள்ளி மறைப்பை முதன் முதல் பார்த்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஜெரேமையா ஹோரோக்ஸ் (Jeremiah Horrocks) என்ற இருபதே வயது நிரம்பிய இங்கிலாந்தின் இளம் விஞ்ஞானிதான்.   இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிச்டனுக்கு(Preston in England) அருகிலுள்ள மூச் ஹூல் (Carr House in Much Hoole) என்னும் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 1639 , டிசம்பர் 4 ம் நாள் வெள்ளி மறைப்பைக்  காண்பிக்க ஏற்பாடு செய்தார்.  ஆனால் அவரது நண்பர் வில்லியம் கிராப் த்ரீ     ( William Crabtree)     இதே வெள்ளி மறைப்பை மான்செஸ்டருக்கருகில் பொரௌக்டனில் ( Broughton, near Manchester) கண்டு களித்தார்.  ஆனால் இதில் ஒரு துரதிருஷ்டம் நிகழ்ந்தது.  என்ன தெரியுமா?  1631 ல் வருகை தரப்போகும் வெள்ளி மறைப்பையும்,  1761 ல் தெரியப்பட இருக்கும் வெள்ளி மறைப்பையும் கணித்துச் சொன்ன ஜோஹான்னஸ் கெப்ளர்,  1639 ல் வரப்போகிற  வெள்ளி மறைப்பை எப்படியோ  கணிக்கத் தவறி விட்டார்.  ஜெரேமையா ஹோரோக்ஸ்,  கெப்ளரின் வெள்ளி மறைப்பு பற்றிய  கணக்கீட்டை  சரி செய்தார். அவரே,  இந்த வெள்ளி மறைப்பு  121 ஆண்டுகளுக்கிடையிலும் ,  ஒரு முறை ஜோடி மறைப்புகளாக 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து குதிக்கிறதே என்றும் பல கணக்குகள் போட்டு எப்படியோ மண்டையைக் குடைந்து  கண்டறிந்து சொன்னார்.  ஹோரோக்ஸ்தான் ஆங்கிலேய வானவியல் விஞ்ஞானிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

வில்லியம் கிராப்த்ரீ:




FMB Mural Crabtree Watching The Transit Of Venus File Name : DSC_0340.TIF File Size : 17.0MB (17774746 bytes) Date Taken : Wed, Feb 4, 2004 3:46:25 pm Image Size : 3008 x 1960 pixels Resolution : 300 x 300 dpi Bit Depth : 8 bits/channel Protection Attribute : Off Camera ID : N/A Camera : NIKON D1X Quality Mode : HI (RGB Uncompressed) Metering Mode : Matrix Exposure Mode : Manual Speed Light : No Focal Length : 32.0 mm Shutter Speed : 1/4 seconds Aperture : F5.6 Exposure Compensation : 0.0 EV White Balance : Incandescent Lens : 28-105 mm F3.5-F4.5 Flash Sync Mode : N/A Exposure Difference : +0.5 EV Flexible Program : No Sensitivity : ISO250 Sharpening : Normal Image Type : Color Color Mode : Mode I (sRGB) Hue Adjustment : 3 Saturation Control : N/A Tone Compensation : Normal Latitude(GPS) : N/A Longitude(GPS) : N/A Altitude(GPS) : N/A Manchester City Council

 பிட்டர்ஸ்பர்க் (Petersburg ) வானோக்கத்திலிருந்து 1761 ல்  வெள்ளி மறைப்பைப்  பார்த்ததின்  அடிப்படையில்   மிக்கைல்  லோமொனோசொவ் (Mikhail Lomonosov ) என்ற விஞ்ஞானி , வெள்ளிக் கோளில் வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்தார்.  மேலும் வெள்ளி மறைப்பின் போது நிகழ்ந்த  சூரியக்கதிர்களின்   ஒளி விலகலினால் வெள்ளியின் பகுதியும், அதன் மேல் வளையமான  வளிமண்டலமும் தெரிந்தன.  பின்னர் 1769 ல் நடைபெற்ற வெள்ளி மறைப்பில்,  கனடாவிலுள்ள ஹட்சன் வளைகுடா,  பாசா கலிபோர்னியா மற்றும் நார்வே பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்து வெள்ளி மறைப்பைப் பார்த்தனர்.  அது மட்டுமல்ல,  முதல் கப்பல் பயணம் செய்த கேப்டன் குக்கும்(Captain Lieutenant James Cook) கூட தஹிதியிலிருந்து (Tahiti ),  அவருடன் HMS Endeavour கப்பலில் பயணித்த சார்லஸ் கிரீனுடன் சேர்ந்து (Charles Green) வெள்ளி  மறைப்பைப்  பார்த்தார்.  குக் பார்த்த இடம் இன்றும் கூட,  வெள்ளியின் முனை ("Point Venus") என்றே அழைக்கப்பட்டு,  அங்கே அதன் அடையாளச் சின்னமாக ஒரு தூண் வைக்கப்பட்டுள்ளது.  அப்போதே,  செக்கோஸ்லோவாக்கிய விஞ்ஞானி  கிறிஸ்டியன் மேயர் கேத்தேரினால்     அழைக்கப்பட்டு,  செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில்  அன்டெர்ஸ் ஜொஹான் லேக்செல்,  ருஷ்ய அறிவியல் கழக உறுப்பினர்கள் போன்றோர் மேலும் 8 இடங்களுக்கு சென்று வெள்ளி மறைப்பைப் பார்த்தனர்.  பிலடெல்பியாவிலும், வெள்ளி மறைப்பைக் காண மூன்று தாற்காலிக வானோக்கு இடங்களும், மற்றும் இதனைப் பார்வையிட டேவிட் ரிட்டன்ஹௌஸ் தலைமையில் ஒரு குழுவும்  இதற்காக அமைக்கப்பட்டு வெள்ளி மறைப்பைப் பார்க்க பிரமாதமான ஏற்பாடு செய்யப் பட்டது. இந்தப்  பார்வையாளர்களின் கருத்துக்கள்,  பதிவுகள்,  தகவல்கள்,  முடிவுகள்  போன்றவை 1771 ல் தான் முதன் முதல் அச்சில் ஒரு தொகுப்பாக  வந்தன; சாதாரண மக்களுக்கும் வெள்ளி மறைப்பு பற்றி அறிந்து கொண்டனர். 

வெள்ளி மறைப்பைப் பார்த்த முதல் மன்னர் மூன்றாம் ஜார்ஜ்..!


ரிச்மன்ட் என்ற இடத்திலுள்ள ராயல் வான் நோக்ககம், சர் வில்லியம் சாம்பர்ஸ் என்பவரால் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்காக வடிவமைக்கப்பட்டது.  மன்னர் அறிவியலின் பல விஷயங்களிலும் குறிப்பாக வானவியலிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் தான் அரச குடும்பத்தில் உள்ளவர்களில், 1769 ல் வந்த வெள்ளி மறைப்பைப் பார்த்து பரவசப்பட்டவர்.  அதன் பின் மன்னரும், அவரது அரச குடும்பமும் வெள்ளி மறைப்பு பற்றி விரிவாக தகவல் எழுதி வைத்தனர். அப்போது தொலை நோக்கியும், கடிகாரமும் இருந்ததால் 1769 ல் வந்த வெள்ளி மறைப்பைப் பற்றி நல்ல பதிவினைச்  செய்தனர்.  அரச குடும்ப  வான் நோக்ககம் மூடிவிட்டதால்  ஆர்மாக் வான்நோக்ககத்திற்கு விக்டோரியா மகாராணி 1840 ல், 1769 ல் வந்த வெள்ளி மறைப்பை  எழுதித் தந்தார்.  

வெள்ளி மறைப்பும்,  சோக சித்திரமான கெல்லாமே  லே ஜென்டிலும் ..!

  கெல்லாமே  லே ஜென்டில்  என்ற  பிரெஞ்சு  விஞ்ஞானியின்  முழுப்பெயர் Guillaume Joseph Hyacinthe Jean-Baptiste Le Gentil de la Galaisière  (September 12, 1725 – Paris, October 22, 1792).  அவர்  வெள்ளி மறைப்பைப்  பார்க்க சுமார் 8 ஆண்டுகள் கப்பலில் பயணம் செய்தார்.  அவர் வான நிகழ்வைப் பார்த்தாரோ  இல்லையோ,  நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தார் விஞ்ஞானி ஜென்டில்.   1760 மார்ச்சில் பாரிசிலிருந்து புறப்பட்டு ஜூலை மாதம் மொரீஷியஸ் தீவை அடைந்தார்;  பின் பாண்டிச்சேரி போனார்.  1761 ல் மீண்டும் பயணம். ஆனால் அப்போது பிரிட்டிஷ்காரர்கள் பாண்டியைப் பிடிக்க, பிரான்ஸ் நோக்கியே வந்தனர்.  அப்போதும் ஜூன் 6 ம்  நாள் வெள்ளி மறைப்பு வந்தது.  அப்போது வானம் நிர்மலமாய், மேகமின்றி சூரியப் பிரகாசத்துடன் காணப்பட்டது.  ஆனால் அவர் வைத்திருந்த பாத்திரம் அப்போது உருண்டதால் அதிலேயே கருத்தினை சிதறவிட்டு,  வானியல் தகவல்களை எடுக்க முடியவில்லை.  அதனால் ஜென்டில் அடுத்த 8     ஆண்டுகளில்   வரவுள்ள  வெள்ளி மறைப்பு வரை காத்திருந்து அதைப் பற்றி தகவல் சேகரிக்க எண்ணினார்.  ஆனால் நிகழ்ந்ததோ வேறு?  விஞ்ஞானி ஜென்டில் மடகாஸ்கரில் தங்கி இருந்து, 1769  ம் ஆண்டின் வெள்ளி மறைப்பை  பிலிப்பைன்சின் மணிலாவிலிருந்து பதிவு செய்ய திட்டமிட்டார். ஸ்பானிஷ்ய  பிரச்சினையினால்,  மீண்டும் பாண்டிச்சேரி செல்ல நேர்ந்தது.  1769 ஜூன் 4 ம் தேதி நிகழவுள்ள வெள்ளி மறைப்பு காண்பதற்காக அங்கே சின்ன வானோக்ககம் அமைத்தார்.  1769,  ஜூன் 4 ம் நாள் காலை முழுவதும் வானம் பளிச்சென்று துடைத்துவிட்டது போன்று இருந்தது. ஆனால் அன்று திடீரென்று வானம் மக்கர் செய்துவிட்டது.  ஜென்டிலால் எதனையும் பார்க்க முடியவில்லை.  தனது துரதிருஷ்டம் எண்ணி மனம் நொந்து பிரான்ஸ் செல்ல முடிவு செய்தார்.  பயணத்தின் முதல் நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு.  எனவே பயணம் தள்ளிப்போனது.   பின்னர் அவரது கப்பல் புயலால் போர்பனில் மாட்டிக் கொண்டது. அங்கேயே ஸ்பானிஷ் கப்பல் வரும்வரை காத்திருந்தார்.  முடிவாக ஜெண்டில் 1771, அக்டோபரில் பாரிசுக்கு திரும்பினார்,  ஆனால் அங்கே ஜென்டில் சட்டப்படி இறந்தவராக அறிவிக்கப்பட்டிருந்தார். என்ன கொடுமை..!  அவரது மனைவியும்  அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து, மறுமணம் செய்து கொண்டார்.  அதன்பின் ஜெண்டில் வெகுவாக முயற்சி செய்து அறிவியலின் ராயல் கழகத்தில் சேர்ந்தார்.  அதன் பின்னர் ஜென்டில் அங்கேயே மறுமணம்  செய்து  கொண்டு, அடுத்து  21 ஆண்டுகள் வரை  உயிருடன் வாழ்ந்த பின்னரே உயிர் நீத்தார்.  ஆனால்  ஆயுளில் அவர் 8 ஆண்டுகள் வெள்ளி  மறைப்பைப்  பார்க்க முயற்சித்தும், அதனைக் காணாமலேயே போன  துரதிருஷ்டக்காரர் ஜென்டில்தான்.  அவரை மையமாக வைத்து வெள்ளி மறைப்பு என்ற படம் மௌரீன் ஹன்டர் என்ற கனடா நாட்டுக்காரரால் எடுக்கப்பட்டு,  1992 ல் வெளியிடப்பட்டது.

வெள்ளி மறைப்பும்,  கருப்பு பின்புல விளைவும்..!

 ஜெரோம் லலாண்டி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி 1761 & 1769 ஆண்டுகளின் வெள்ளி மறைப்பு பதிவுகளைக் கொண்டு, ஆய்வு செய்து ஒரு வானியல் அலகின் தொலைவு 15 . 3 கோடி கி,மீ  (±1 மில்லியன் கி.மீ) என 1771 ல் கணித்தார்.   இதன் துல்லியத் தன்மை என்பது அதன் வளிமண்டலத்தால் தெரியும் கருப்பு பின்புல விளைவால் (Black back drop) கொஞ்சம் குறைவாகவே உள்ளது.  ஆனால் பின்னர் வந்த ஹாரோக்ஸ் கணக்குப்படி கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தது.  1769 ல் பெஞ்சமின் பிராங்க்ளினும் வெள்ளி மறைப்பை அமெரிக்காவிலிருந்து பார்த்த்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



வெள்ளி மறைப்பில்  பிரெஞ்சு விஞ்ஞானி ஜீனின் வேதனைகள்.!



 பிரெஞ்சு கடல் பயணத்தை மேற்கொண்ட,  ஜீன் சாபி டி ஆடோடோக் தலைமையிலான குழு ஒன்று 1761 ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பினைக் காண சைபீரியாவிலுள்ள டோபோல்ச்க் நோக்கி பயணித்தது.  ஆனால் அந்தக் குழு ஒரு ஆற்றைக் கடக்கும் போது பெரிய பிரச்சினையில் சிக்கித் தப்பித்தது.  அது ஒரு நீண்ட,  துன்பங்கள் பலவற்றைச் சந்தித்த, மோசமான பாதைகளில் மேற்கொண்ட கடினமான பயணம்.  இருப்பினும் கூட  வெள்ளி மறைப்பின் 6 நாட்களுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டனர்.  வெள்ளி மறைப்புக்குக் கொஞ்ச நேரம் முன்பு,  ஜீன் சாபி அங்குள்ள உள்ளூர் மனிதர்களால் தாக்கப்பட்டார்.  காரணம் என்ன தெரியுமா?  ஜீன் சாபி சூரியனின் கதிர்களை ஏதோ செய்து தடை செய்யப் போகிறார் என்றும், அதனால் அவர்களுக்கு வரவிருக்கும் வசந்தகால  நீரூற்றுக்கள்  தடைபடப் போகிறது என்றும் மக்கள்  நம்பியதால் ஜீன் சாபியை உள்ளூர் மக்கள் செமத்தியாய்  மொத்திவிட்டனர்.  ஆனால் இறுதியில்  வானவியல் குழுவினர். ஜீனைக் காப்பாற்றிவிட்டனர்.   பின்னர் குழுவினர் அனைவரும் அருமையான வெள்ளி மறைப்பை தரிசனம் செய்தனர்.  பிரெஞ்சு கழகம் 1761 ல் கிடைத்த வெற்றி கொண்டு மகிழ்ந்தது.   மீண்டும் 1769 ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பைக் காண ஜீனை அனுப்பியது.  அதற்காக ஜீன் உலகின் எந்த மூலைக்கும்,  உறைபனிக்கு கீழுள்ள பகுதிக்குக் கூட செல்லத் தயாரானார்.  ஆனால் மீண்டும் சோகத்தின் விளிம்பை அந்தக் குழு தொட்டது.  அவர்கள் மெக்சிகோவிலுள்ள வீரக்ரூஸ் என்ற இடத்திற்குப் போனார்கள், அங்கு மக்கள் பிளேக் நோய் வந்து மிகவும் அல்லலுற்றனர். அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லாமல்,  மக்களுடன் தங்கி அவர்களுக்கு உதவி  செய்தனர்.  ஜீனும் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.  ஜீன் சாபி  இறப்பின் எல்லை வரை சென்று அதன்பின் வெள்ளி மறைப்பை எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் நிகழ்ந்தது  என்றும் துல்லியமாகப் பதிவு செய்தார்.  ஜீன் சாபியின் பதிவுதான் 1769 ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பின் மிக நல்ல பதிவென்றும் பாராட்டப்படுகிறது. பின்னர் வெள்ளி மறைப்பு நடந்த கொஞ்ச நாளிலேயே தனது 41 வயதில் காய்ச்சலினால் காலமானார்.

..தொடர்ச்சி. அடுத்த கட்டுரையில்..





இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.