மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 2
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நாம் எவ்வளவோ, தைரியமாய், நன்றாக இருக்கிறோம் என்று தோணும்.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப் படும் மனிதர்கள்..! சாப்பிடக் கூட தோன்றாது. வேதனை நெஞ்சை நெருடும். நேற்று 25 பெண்கள் அந்த வார்டுக்கு,,அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, சிகிச்சை முடிந்து பரிசோதனைக்கு என்று..!வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, இது ஒன்றும் இல்லை என்ற அறியாமையால்,எதுவும் தெரியாததால் நோய் முற்றிய பெண்கள் அதிகம்.ஆண்களும் புற்று நோய் சிகிச்சைக்கு வந்திருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், பெண்களின் மார்பக புற்று நோய், 12 % அதிகரித்துள்ளதாம்.
குறிப்பாக நகர்ப்புற பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறதாம்..! இந்த மையம் இன்னொரு சிறப்பு சேவையும் செய்கிறது. அதுதான்,புற்று நோயால் வேதனைப் பட்டு பிரச்சினைக்குல்லாகும் போது, அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டு வாசலுக்கே போய் முதலுதவி செய்து, அழைத்து வருகிறது . என் நண்பர் அருணந்தியை மூளைப் புற்று நோய் சிகிச்சைக்காக 1 1 /2 வருடம் மதுரை அப்போல்லோவில் வைத்து பார்த்தோம். கோவை ராமகிருஷ்ணாவில் எனக்கு சிகிச்சை பார்த்தோம். மற்ற இடங்களைவிட் இங்கு குறைவாகவே பணம் செலவாகிறது. பணமே பிரதானமாய் மருத்துவ மனைகள் இருக்கும் காலத்திலும், மனித நேயம் பார்க்கும், உயிர் காக்கும் ஒரு மருத்துவ மனை..கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை..!
மார்பக புற்று கட்டியிலிருந்து திசு/திரவம் எடுத்தல்
இன்னொரு கதை சொல்கிறேன். ஜூலை மாதம் கட்டி இருப்பது தொடர்பாக பழனியில் ஒரு மருத்துவரைப் பார்த்து ஸ்கேன் எடுக்கப்பட்டது. கட்டி இருந்தது தெரிந்ததும், புற்று நோய் மருத்துவரிடமே செல்லலாம் என மருத்துவ நண்பர்களைக் கேட்டதும் மதுரையில் ஒரு பிரபலமான சிறப்பு புற்று நோய் மருத்துவர் ஒருவரைச் சொன்னார்கள்.ஒரு வார காலம் முயற்சி செய்து அவரிடம் சந்திப்ப்பு தேதியை வாங்கி பார்க்கச் சென்றோம். அவரது உதவியால் பெயரை பதிவு செய்தார்.அவர் அறையின் முன்னே ராணி, தினத்தந்தி, தினமலர்,தினமணி என அவரைப் பற்றி வந்த விஷயங்கள் ஏராளமாய் ஒட்டப்பட்டு இருந்தன. அது மருத்துவ மனையா என்பதில் ஐயம் கூட வந்தது. மருத்துவர் என்னைப் பார்க்கவோ, பேசவோ இல்லை. என்னை நேராக சோதனை அறையில் போய் படுக்கச் சொல்லி பணிப்பெண் மூலம் தகவல் வந்தது. போய் படுத்தவுடன், முகத்தை மூடினார்கள். கட்டியிலிருந்து திசு எடுக்கப்பட்டது. எனது முந்தைய சோதனை முடிவுகளை அவர் பார்க்கவே இல்லை. அவர் என்னுடன் வந்த, என் மகனின் நண்பனும், என் மகன் போன்றவனுமான கோகுலை கூப்பிட்டு அடுத்த வாரம் அறுவை சிகிச்சைக்கு வரச் சொன்னார். கோகுலுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை.என்னிடமும் தகவலை சொல்லவில்லை. சோதனை முடிவு தெரியட்டும் பார்க்கலாம் என்றான். அந்த டாக்டர் என்னை கடைசி வரை பார்க்கவே இல்லை. மேலும் அந்த மருத்துவ மனை சுகாதாரமானதாக,காற்றோட்ட மானதாகவும் இல்லை. மருத்துவர் நடந்து கொண்ட விதமும் பிடிக்கவில்லை.
மருத்துவரின் இரண்டாவது ஒப்புதலக்காக, வேறொரு மருத்துவ மனையை நினைத்துப் பார்த்த போது, ராமகிருஷ்ணா மருத்துவ மனையைப் பற்றி எண்ணினோம். ஆனால் கோவை நகர் தமிழ் நாட்டிலேயே அதிகமான வாழ்க்கை செலவு/தரம் உள்ள நகரம்.. சென்னையைவிடக் கூட..!நமக்கு கட்டுபடி ஆகுமா என்ற நினைப்பு..! எதற்கெடுத்தாலும் மதுரைக்கே ஓடிய பழக்கம் வேறு.! மனம் தத்தளித்தது. ! இருக்கட்டும், வெறும் சோதனைதானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கோவை வந்தேன். இதற்கிடையில் மதுரை மருத்துவரை எப்படி தவிர்ப்பது என்ற குழப்பம் வேறு..! அவரின் மாணவரும், மருத்துவருமான ஒருவரை அணுகி, என் மகன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று சொல்லவா என்றேன். உடனே அவர் தேள் கொட்டியது போல, ஐய்யய்யோ, அப்படி எல்லாம் சொல்லி விடாதீர்கள். ஒரே தீட்டாக தீட்டிவிடுவார் என்றார். அட.. மனிதா,, இப்படியா என நினைத்து, எப்படி சோதனை முடிவை அவரிடமிருந்து வாங்க என்று யோசனை.! ஒரு வழியாக நேரில் போகாமலே வாங்கிவிட்டோம், இந்த நிலையில்தான், என் நண்பர் முனைவர் வெங்கடேஸ்வரனிடம் , எனக்குள்ள பிரச்சினையை சொல்ல, அவர்தான்,என்ன மோகனா, நம் நண்பரும், மருத்துவருமாகிய நளினி இருப்பது தெரியாதா? என்றார். அவரின் அலைபேசி என்னை வாங்கினேன். அதற்குள் என்னை நளினி அழைத்து, பழனியில் எடுத்த சோதனை முடிவைக் கேட்டு, உடனே கோவை புறப்பட்டு வாருங்கள், அமெரிக்க பயணத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள் என்றார்.சென்றேன்.அறுவை சிகிச்சை நடந்தது. நளினி அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்தார். கோகுல் அவனது அனைத்து பணிகளையும் விட்டு விட்டு என்னுடன் 15 நாட்கள் இருந்தான். இப்படி நான் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்தது என்பது ஒரு விபத்துதான். ஆனால் மிக மிக நல்ல விபத்து.மதுரையில் நான் சிக்கி இருந்தால்/அல்லது வேறு மருத்துவ மனைக்கு சென்றிருந்தாலும் இதைவிட பல மடங்கு பொருள் செலவு ஆகி இருக்கும். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்..! நம்மை மொட்டையடிக்கும் மருத்துவ மனைகளுக்கு மத்தியில்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை , ஒரு மனித உயிருக்கு சேவை செய்யும் ஆலயம்..!
Chennai:13-02-2011: The Cancer Survivours Day, celebrated at Sivagami Pethachi Auditorium, Alwarpet on Sunday. 100 survivors attend the function and light the lamp. Prominent citzens from Chennai participating in the function. Photo:R_Shivaji Rao
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் 25-08-2011 - இல் எழுதியிருக்கிறார்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள். பின்னூட்டம் எழுதும்போது உங்கள் வலைத்தளமுகவரி அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுங்கள்.
(Anonymous comments will not be published).
தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.
மிக்க நன்றி.