Jaya TV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Jaya TV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 18, 2012

தோழர் திரு காஸ்யபனுடன் இனிய சந்திப்பு

நான் பதிவு எழுத ஆரம்பித்தது மார்ச், 2011.  எனது பதிவில் ‘என்னைப் பற்றிய குறிப்புகளில்”  எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில்” என்று குறிப்பிட்டிருந்தேன்.


எனது பதிவை படிக்க ஆரம்பித்த திரு காஸ்யபன் (நாக்பூர்) அவர்கள் எனக்கு கடந்த வருடம் ஒரு நாள் தொலைபேசியில் பேசினார்.  எனது கொள்கைக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.  எங்களது தொலைபேசி தொடர்பு அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. 



அவர் சொல்லியபடி அங்கு உள்ள ஒரு குழந்தைக்கு கல்விக்காக ஒரு சிறு உதவி செய்தேன்.  அதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி – முகம் தெரியாத ஒரு சிறுமிக்கு உதவியிருக்கிறேன் என்று அடிக்கடி கூறுவார்.

இந்த வருடம் ஏப்ரல் மத்தியில் ஒரு நாள் தொலைபேசியில் பேசி மே மாத வாக்கில் தென்காசிக்கு ரயிலில் செல்வதாகவும் சந்திக்க முடியுமா என்று கேட்டார்.  நான் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன்.  பிறகு யோசித்தேன், இங்கு நிற்பது 2  நிமிடங்கள் – இதில் இவரை நேரில் பார்த்ததில்லை, ஒன்றும் பேச முடியாது, அதற்குள் ரயில் கிளம்பி விடும்.  எனவே நான் ஒரு மாற்று யோசனை சொன்னேன் – நீங்கள் எந்த கோச்சில் வருவீர்கள் என்று சொல்லுங்கள்.  நானும் எனது மனைவி திருமதி உமா காந்தி அவர்களும் அந்த கோச்சில் ஏறி கடையநல்லூர் வரை வருகிறோம், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் இருக்கும், நாங்கள் வரும் போது உங்களுக்கு காலை உணவு கொண்டு வந்து விடுகிறோம், நாங்கள் கடையநல்லூர் கோவிலில் சென்று சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொன்னோம்.  அவர் நாங்கள் கிளம்பும் போது சொல்கிறேன் என்று சொன்னார்.  நாங்கள் கிட்டத்தட்ட 10 பேர் வரை வருவோம், அதனால் உணவு எல்லாம் கொண்டு வந்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்றும், உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்று சொன்னார்.

இந்த மாத ஆரம்பத்தில் திருச்சி மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் வரும் போது சொல்லி விட்டு வருகிறோம் என்றார்.  10.5.2012 அன்று பேசி நாளை வருகிறோம், நீங்கள் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வந்து விடுங்கள், என்னுடன் வரும் மகள் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வரட்டும், நாம் வெளியில் பேசிக் கொண்டிருப்போம் என்றார்.  அவர்கள் கிளம்பி வரும் வழியில் பாதையை தவற விட்டதில் தாமதமாகி விட்டது.  எனவே அவர் வரும் போது எங்கள் வீட்டில் இறங்கிக் கொள்கிறேன், மற்றவர்கள் கோவிலுக்கு சென்று வந்து என்னை அழைத்துச் செல்வார்கள் என்றார்.  ஊரில் நுழைந்தவுடன் திரு காமராஜர் சிலை அருகில் நின்று போன் செய்தார்கள்.  எனது மனைவி சென்று அவர்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.  

திரு காஸ்யபன் அவர்களும், அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.  அவரது மகள், அவரது மருமகன், அவரது பேரன் எல்லோரும் கோவிலுக்கு சென்று வருகிறோம் என்று கூறிச் சென்றார்கள்.  நாங்கள் எப்படி செல்வது என்று அவர்களுக்கு சொல்லி அனுப்பினோம்.

அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கும்.  இவ்வளவு மூத்த வயதில் எங்களைப் பார்க்க வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  திருச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்ல வேண்டியது, உங்களைப் பார்ப்பதற்காக தான் இங்கு வந்தோம் என்றார்.  நாங்கள் நெகிழ்ந்து விட்டோம்.  அவர்கள் வரும் போது கிட்டத்தட்ட இரவு 7 மணியாகி விட்டது.  எனவே இரவு உணவு அருந்தி விட்டு சொல்லுமாறு வேண்டினோம்.  அவர்களும் சரி என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 8.15 அளவில் எனது மனைவி அவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து சாப்பிட ஏற்பாடு செய்தார்கள்.  அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டது  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

திரு காஸ்யபன் அவர்களைப் பற்றி:

அவர் எனக்கு பதிவராக தான் தெரியும்.  அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில், அவரைப் பற்றிய குறிப்புகளில் படித்ததில் தெரிந்தது – எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது ஒரு மாமனிதரும் அவரது மனைவியும் என்று.  நாங்கள் மிகவும் நெகிழ்ந்து விட்டோம்.  அவர் ஒரு தொழிற் சங்கவாதி.  தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் கிட்டத்தட்ட 35 வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்.  தமிழில் மூன்று சிறு கதைத் தொகுப்புகளும், ஆங்கிலத்தில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், இந்தியில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருப்பதாக அவரது குறிப்புகள் காண்பிக்கின்றன.  அவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருப்பதாகவும், அதன் இணைப்பையும் குறிப்பிட்டார்.


திரு காஸ்யபன் அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களைப் பற்றி, அவர்கள் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருப்பதாகவும் – இவற்றில் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், சமீபத்தில் சாஹித்ய அகாடமிக்கு ஒரு புத்தகம் மொழி பெயர்த்து கொடுத்திருப்பதாகவும், அந்த புத்தகம் அச்சில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

எங்களுக்கு ஆச்சரியம், தாங்க முடியாத மகிழ்ச்சி.  எவ்வளவு பெரிய மாமனிதர்கள் எங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் எங்களது வீட்டில் இருந்தார்கள்.  அப்போது எனது தங்கை மகன் (அடுத்த வீடு தான்) வந்திருந்தான்.  அவன் B.Sc., இறுதியாண்டு படிக்கிறான் என்றும், அவனுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.  அவர் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.  அருமையான யோசனைகள் சொன்னார்கள்.

சுமார் 9 மணியளவில் அவரது குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றார்கள்.  இரவு நெடிய பயணம் இருப்பதால் அவர்கள் எங்கள் வீட்டிற்குள்  வர நேரமில்லை.  நாங்கள் இவர்களை அவரது கார் வரை சென்று வழியனுப்பி வந்தோம்.  அங்கு வைத்து எங்களை அவர் மகள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவரது மகள் திருச்சியில் பணிபுரிவதாக சொன்னார்; அவர்களும் நிறைய படித்திருக்கிறார்கள்.  அவரது மருமகன் திருச்சி பொறியியல் கல்லூரியில் (முன்பு Regional Enbineering College – REC – தற்போது National Institute of Technology – NIT) பேராசிரியராகவும் ஒரு பிரிவுக்கு தலைவராக (Head of the Department – HOD) ஆக இருப்பதாகவும், அவரது மகன் நாக்பூரில் மத்திய அரசுப் பணி புரிவதாகவும், அவரது மருமகள் தபால் துறையில் பணி புரிவதாகரும் சொன்னார்.  அவரது குடும்பமே ஒரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது.  அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்தது எங்களுக்கு  பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம்.

அவரது பதிவின் இணைப்பு:


அவரது பதிவை நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள்.  அருமையாக எழுதியிருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களை அவரது பதிவில் பின்னூட்டமாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் அவரது ஜெயா தொலைக்காட்சிக்கான  நேர்காணலுக்கான 2 இணைப்புகள் கொடுத்திருக்கிறேன்.  நாங்களும் கேட்டோம்.  ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கருத்துகள் ‘தீர்க்கமாகவும், ஆழமாகவும், மனதைத் தைப்பதாகவும்’ இருக்கின்றன.



நீங்களும் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து கேட்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  பதிவுகளிலும், நேர்காணல்களிலும் உங்களது மனதில் பட்ட கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.