வெள்ளி, மே 27, 2011


                    
                   காக்கை குருவி எங்கள் ஜாதி  

 எங்கள் உறவினர் திரு தங்கராஜ் சிவகாசியில் பறவைகளுக்கு தினந்தோறும் வீட்டு மொட்டை மாடியில் தான்யங்களும் தொட்டியில் நீரும் கடந்த மூன்று வருடங்களாக வைத்து பராமரித்து வருகிறார்.  இது எளிய செய்தியாக இருக்கும்.  நேரில் பார்த்தால் அதில் உள்ள சிரமங்களும், அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், அவரது விடா முயற்சியும் தெரியும்.

நாங்கள் உங்களை சிவகாசிக்கு திரு தங்கராஜ் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம்.  சிவகாசியில் விருதுநகர் புறவழிச் சாலையில் சுப்ரமணியபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது.  நமது களம் வீட்டின் இரண்டாவது மாடி - மொட்டை மாடி - 25' X 25' - சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன.  பக்கங்களில் நிறைய மரங்கள் உள்ளன.  மாடியில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்று வைத்திருக்கிறார், உபரியாக சின்டெக்ஸ் நீர்த்தேக்கம் ஒன்றும் வைத்திருக்கிறார்.  மாடிச் சுவரில் பறவைகள் நீர் அருந்துவதற்காக இரண்டு சிமின்ட் தொட்டிகள் வைத்திருக்கிறார்.  

அளவு இரண்டு அடி நீளம், ஒரு அடி அகலம், அரை அடி ஆழம்.  இவை பறவைகளுக்காக தேடிப் பிடித்து விசேஷமாக ஆர்டர் கொடுத்து வாங்கப் பட்டவை.  பிளாஸ்டிக், மற்றும் இரும்பு தகடுகளில் செய்தால் தண்ணீர் சீக்கிரம் சூடாகி விடும்.  பறவைகள் நீர் அருந்த வராது என்கிறார்.

அந்த மூலையிலே ஒரு தண்ணீர் குழாய் அமைத்திருக்கிறார்.  தரை முழுவதும் பாருங்கள்.  தான்யங்கள் சிதறிக் கிடக்கின்றன.  அரிசி, கோதுமை முதலியன.



















இவர் பறவைகளை பராமரிக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.  ஒரு பாத்திரத்தில் தான்யங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்.  பறவைகள் நீர் மட்டும் அருந்தி விட்டு சென்று விடுகின்றன.  ஒரு நாள் இவரது குழந்தைகள் விளையாட்டில் தான்யங்கள் பாத்திரங்கள் கொட்டி தான்யங்கள் சிதறி விடுகின்றன.  மறு நாளிலிருந்து பறவைகள் தான்யங்களை பொறுக்க ஆரம்பிக்கின்றன.  அதிலிருந்து தான்யங்களை விதை விதைப்பது போல் தூவ ஆரம்பித்து விட்டார்.

காலை ஆறு மணியிலிருந்து பத்தரை மணி முடிய காகங்கள் வரும், நீர் அருந்தி விட்டு தான்யங்களை பொறுக்கிவிட்டு செல்லும்,  விசேஷமாக வடை வாங்கி சிறிய துண்டுகளாக பிய்த்து மேலே சிமின்ட் கிராதி மேல் தூவுகிறார். காகங்கள் விரும்பி உண்கின்றன.  இவர் சற்று தாமதமாகி விட்டால் காகங்கள் கரைகின்றன.  இவரை ஞாபகப் படுத்துகின்றன.  இதற்கு இவரது குழந்தைகள் - ஸ்வேதா, ஸ்வாதி - ஒத்துழைப்பும், ஆர்வமும் அதிகம்.

பறவைகளுக்காக இவர் மொட்டை மாடியை உபயோகிப்பதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் - காலை பத்தரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி முதல் - துணிகள் காயப்போடுவது, வடகம், கோதுமை போன்ற தான்யங்கள் காயப் போடுவது, குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் போன்றவை.  உணவுப் பொருட்கள் காயப் போட்டால் கருப்பு துணி விரித்து காயப் போடுகிறார்கள்.  பறவைகள் கருப்பு நிறத்திற்கு வராது என்கிறார்.

இன்று (22.5.11) ஞாயிற்றுக் கிழமை மதியம் சுமார் மூன்று மணி இருக்கும்.  மொட்டை மாடி காலியாக இருக்கிறது. 

பறவைகள் ஆள் நடமாட்டம், ஏதாவது அசைவுகள் இருந்தால் இறங்காது என்பதால் நாங்கள் மூடிய கதவிற்கு பின்னால் நின்று கொண்டு கிராதியின் துவாரங்கள் வழியாக பார்த்துக் கொண்டு காத்திருக்கிறோம்.  மெதுவாக ஒரு புறா மட்டும் சுவரில் வந்து அமர்கிறது. 

 படிப்படியாக எதிரில் உள்ள சுவரில் மற்ற புறாக்கள்  காத்திருக்கின்றன.  இந்த ஒற்றைப் புறாவின் சைகைக்காக காத்திருக்கின்றன.  இடையிடையே காக்கைகள் வந்து தண்ணீர் குடித்து விட்டு, சில குளித்து விட்டும் செல்கின்றன.  அணில்கள் வந்து தான்யங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தி விட்டும் செல்கின்றன. 


அணில் இரண்டு கால்களில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களில் சாப்பிடும் அழகு அழகு தான்.

நிறைய நேர காத்திருப்பிற்குப் பின் ஒரு புறா இறங்குகிறது.  பின் படிப்படியாக இறங்குகின்றன.  ஒரே தடவையில் கிட்டத்தட்ட நாற்பது புறாக்கள் வரை இறங்குகின்றன. 


 கிட்டத்தட்ட நான்கைந்து வகைகள் இருப்பது போன்று தெரிகின்றது. ஆண் புறா சற்று பெரிதாக இருக்கின்றது.  கம்பீரமாக இருக்கின்றது.  கூட்டமாக இரை எடுக்கும்போது ஆண் புறா சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்வது போல் கம்பீரமாக வருகிறது.  பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.  படங்களை பாருங்கள்.  

ஏதாவது சாலையில் வண்டிச் சத்தமோ ஏதாவது வெடிச் சத்தமோ ஏதவாது பாத்திரங்கள் விழும்போது உள்ள சத்தங்களோ கேட்டால் உடனே கூட்டமாக கிளம்பி விடுகின்றன.  ஒரே தடவையில் உடனே கிளம்பி விடுகின்றன.  பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

 கரிச்சான் குருவி, சிட்டுக் குருவி, மைனா, காகங்கள், அண்டங்காக்கா போன்ற பறவைகள் வருகின்றன.  தற்போது மயில்களும் காலையில் வருகின்றன என்றார்.  படங்களை பாருங்கள்.
 




















திரு தங்கராஜைப் பற்றி, இவர் எனது மூத்த தமக்கையின் மகன்.  படிப்பு என்னைப் போல் பத்தாவது வகுப்பு தான்.  பிறந்த ஊர் சிவகாசி.  சிவகாசி என்றாலே சுறுசுறுப்பு தான்.  இந்த மண்ணை மிதித்தாலே சுறுசுறுப்பு உங்களை பற்றிக் கொள்ளும்.  வந்து பாருங்களேன்.  இங்குள்ள மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று.  இரவும் பகலும் சந்தோசமாக உழைத்துக் கொண்டே  இருப்பார்கள்.  இந்தியா முழுக்க சுற்றி வருவார்கள்.  எனவே வெளியே உள்ள மாறுதல்கள், கட்டிடக்கலை, துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவைகள், புதிய வாகனங்கள் இங்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.  எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, நல்ல வாழ்க்கை தரம், படிப்பிற்கு உதவுவது, தொழிலாளர்களுக்கு உதவுவது - கிட்டத்தட்ட ஒரே குடும்பம் போன்று தான் இருப்பார்கள் -  நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

இவர் மின்சார வயரிங் சம்பந்தப்பட்ட சிறிய தொழிற்சாலை வைத்திருக்கிறார்.  இவரது மனைவியும் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார்.  கீழே தொழிற்சாலை, மாடியில் வீடு.  மதியத்திற்கு பிறகு இவருக்கு வேலையும்  சேர்த்து  பறவைகளைக் கவனிப்பதுவும் ஒரு வேலை தான்.  இரண்டரை மணிக்குப் பிறகு மணிக்கொரு தடவை மாடிக்குப் போய் பறவைகள் சாப்பிட சாப்பிட தான்யங்களை தூவி விட்டு,

 தண்ணீர் குறைந்தால் பக்கத்துக்கு குழாயிலிருந்து பிடித்து ஊற்றி விட்டு வருகிறார்.  இந்தப் பணி ஆறரை மணி வரை நடக்கிறது.  தினந்தோறும் இவரே தொட்டிகளை கழுவி தண்ணீர் மாற்றி விடுகிறார்.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை மொட்டை மாடியை நன்கு பெருக்கி சுத்தம் செய்கிறார்.  இவர் வேலைக்கு வெளியில் செல்ல வேண்டியிருந்தால் இவரது மனைவி இந்தப் பணியை செய்கிறார்.  இவர்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் மாற்றி விட்டு தான்யங்களை நிறைய போட்டு விட்டு செல்கிறார்கள்.இரண்டு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி செல்கிறார்கள்.  குழந்தை வளர்ப்பு போல் கவனித்துக் கொள்கிறார்கள்.

தினந்தோறும் கிட்டத்தட்ட மூன்று கிலோ அரிசி, அரைக் கிலோ கோதுமை, மற்றும் வடை முறுக்கு (மாற்றி மாற்றி) கொடுத்து வருகிறார்.  இந்தச் செலவு இவருக்கு பெரிதல்ல. 

இவரது பொன்னான நேரமும், இவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், இவரது அர்ப்பணிப்பு உணர்வும் தான் போற்றத் தக்கது.  நாங்கள் இவரையும் இவரது குடும்பத்தினரையும் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

மற்றுமொரு செய்தி - ஒரு ஊனமுற்ற காக்கை வாடிக்கையாக வந்து நீர் அருந்தி செல்கிறது.

  சில நேரம் நோயுற்ற காக்கை, அணில்கள் அந்த சின்டெக்ஸ் தொட்டி அருகில் வந்து இருக்குமாம்.  இவர் அதற்கு தனியாக தண்ணீர், உணவு வைப்பாராம்.  இரண்டு மூன்று நாட்கள் கூட தொடர்ச்சியாக இருக்குமாம்.  சரியானவுடன் சென்று விடுமாம்.  மரணமடைந்து விட்டால் அப்புறப் படுத்தி விடுவாராம்.  பறவைகளுக்கும் அணில்களுக்கும் இவருக்கு பாசப் பிணைப்பு அப்படி இருக்கிறது.

இந்த பதிவு ஒரு ஞாயிறு மாலைப் பொழுது முழுவதையும் எங்களுக்கு ஒதுக்கி எங்களுக்கு வசதி செய்து கொடுத்த திரு தங்கராஜ் குடும்பத்தினருக்கும், எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும்,

 எனது மனவோட்டத்தை புரிந்து புகைப்படங்கள் எடுத்த (கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அந்த கதவிற்கு பின்னால் நின்று) எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - முடிந்தால் நீங்களும் உங்களது வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமின்ட் தொட்டியில் நீர் வைத்து உணவுகளும் கொடுத்து (தான்யங்கள் அல்லது சோறு) பறவைகளை பராமரியுங்கள்.  ஏதாவது விபரங்கள் தேவைஎன்றால் என்னை தொலைபேசியிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.  நான் அவரிடம் கேட்டு உங்களுக்கு முடிந்த உதவி செய்கிறேன்.

இந்த பதிவை படித்து நிறை குறை ஆலோசனைகள் எழுதுங்கள்.

                                                                    மிக்க நன்றி.



22 கருத்துகள்:

  1. இயற்கையோடு இசைந்து வாழுவதும், இயற்கையின் உயிரனங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, ஒரு தனிமனிதராக உங்கள் நண்பர் தங்கராஜ் பரமாரித்து,
    தானியங்கள் போடுவதும் வரவேற்கத்தக்க விடயம்.
    அவருக்குப் பாராட்டுக்கள்.
    இக் காலத்தில் ஒரு சில உயிரினங்களைப் பராமரிக்கவே பலர் அல்லாடும் வேளையில் கூட்டமாக உயிரினங்களைப் பராமரிக்கும் உங்கள் நண்பரின் செயலுக்கு ஒரு சபாஷ்.

    படங்களையும், இந்த அருமையான ஆச்சரியமிகு தகவலையும் பகிர்ந்து கொண்டமைக்காக உங்களுக்கு நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள பதிவு
    படங்களுடனும் தெளிவான
    விளக்கங்களுடனும் மிக அழகாக
    பதிவினைக் கொடுத்துளீர்கள்
    தொட்டி விஷயம் மிகவும் நல்ல தகவல்
    நானும் செய்ய முயற்சிக்கிறேன்
    தங்கள் அதீத முயற்சிக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு ஐயா. தில்லியில் பெரும்பாலான சாலை சந்திப்புகளில் புறாக்களுக்கு தானியங்களும் வைக்கிறார்கள். நிறைய பேர் இதைச் செய்கிறார்கள். எனினும் தனியொருவராய் இந்த சேவையை செய்யும் உங்கள் உறவினர் பாராட்டுக்குத் தகுந்தவர்…

    பதிலளிநீக்கு
  4. ரத்தின வேல் ஐயா அவர்களே!சிவகாசி, சாத்தூர் எனக்கும்பழக்கமான ஊர்கள்தான்.அந்த மக்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. அங்குள்ள சிறு தொழில் அதிபர்கள் வடநாட்டு பெரும் பணக்கார சேட்டுகளின் கைபாணங்களாக மாறிவிட்டார்கள். தீப்பெட்டியில் சுற்றும் நீலப் பேப்பரிலிருந்து கருமருந்து வரை உரிமம் சேட்டுகள்கைகளில் . வடக்கு வாழ்கிறது என்று சொன்னவர்கள் தமிழகத்தை தொழில்மயமாக்கிய லட்சணம் இது . வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி ஐயா.
    நானும் தண்ணீரும், தானியங்களும் வைத்திருக்கிறேன். நிறைய பறவைகளைக் கண்டு ரசிக்கிறேன் சூரிய உதயத்துடன்.

    பதிலளிநீக்கு
  6. வே. பாண்டி, தூத்துக்குடிதிங்கள், ஜூன் 06, 2011

    திரு. ரத்தினவேலு அவர்களுக்கு,
    மிகவும் பயனுள்ள செய்தி. இச்சேவை பாராட்டுதற்குரியது. எனது வீட்டிலும் மொட்டை மாடி உள்ளது. இது போல செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. கூடிய விரைவில் இதைச் செய்வேன் என நம்புகிறேன்.
    வே. பாண்டி, தூத்துக்குடி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    இன்றுதான் தங்கள் தளத்திற்கு வந்தேன். இந்த பதிவைப்பார்த்தவுடன் இன்று BBCயில் பார்த்த Summer Watch டாக்குமெண்டரி நினைவிற்கு வந்தது.
    இந்த பிரிட்டிஷ் காரர்கள் தோட்டங்களுக்கு, காடுகளுக்கு போய் இந்த மாதிரி வித வித பறவைகளை அதற்கென உள்ள, பறவைகள் அறியாமல், தொந்தரவு செய்யாமல் பார்க்கிறார்கள் - எல்லாப்பருவங்களிலும் Spring Watch Autumn Watch...
    பக்கத்து வீட்டு தாத்தாவைப்பார்த்து என் மனைவியும் வீட்டு தோட்டத்தில் பறவைகளுக்கு தானியங்கள், ரொட்டித்துண்டுகள் தினமும் வைக்கிறார். புறாக்களும், வித வித பறவைகளும் தினமும் வந்து உண்டுவிட்டு செல்கின்றன...
    பல்வேறு புத்தக, இலக்கிய தளங்களுக்கு நடுவே தங்கள் பதிவு வித்தியாசமாக இருந்தது!

    மற்றும் சுஜாதா அவர்களின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு (முதலில் 'கருப்பு, வெளுப்பு, சிவப்பு' தானே தலைப்பாக இருந்தது?) தாங்கள் அனுப்பிய புத்தகம் மூலமாக இருந்தது என்பதை குறித்து சந்தோஷம்!
    அடுத்த முறை இந்தியா வரும்போது சந்திக்க முயற்சிக்கிறேன் - சாத்தூரில் சித்தப்பா இருக்கிறார்கள்.

    Essex சிவா

    பதிலளிநீக்கு
  8. போற்றுதலுக்குரிய நல்ல மனிதர்

    பதிலளிநீக்கு
  9. ஆக.... இப்படியும் கூட பறவைகளுடன் உறவு பேணலாம்!

    பதிலளிநீக்கு
  10. சார்..பிரமாதம்...என்ன ஒரு கருணை பறவைகள் மீது..இங்கு ஆரண்ய நிவாஸத்துக்கு மயில்கள் வரும்.. நாங்களும் தானியங்கள் போடுவோம்..கொஞ்ச நாளாகக் காணோம்..எங்கள் காலனி வாட்ச்மேனைக் கேட்க,அவர் சொன்னார்..’பக்கத்து கிராமத்தில,வயல்ல மயில்கள் மேய்ந்து நெற்கதிரை நாசம் பண்றதினால,அவங்க அத்தனை மயிலையும் (சுமார் இருபத்தைந்து) மருந்து வைத்துக் கொன்று விட்டார்கள்’
    பாவிகள்! உங்கள் பதிவைப் பார்த்தவுடன் பீறிட்டு வந்து விட்டது..எனக்கு இன்னமும் ஒன்று விளங்கவில்லை..
    (1) விவசாயிகள் அவ்வளவு கொடூரமானவர்களா?
    (2) அல்லது வறுமை தான் அத்தனை கொடிதா?

    பதிலளிநீக்கு
  11. வாழ்க தங்கராஜ்...என் அனுபவம் கீழே:(இதில் ஒரு துளி கூட மிகைப் படுத்தப் படவில்லை!!- அனைத்தும் நிஜம!!)
    கடந்த மூன்று திங்களாக, ஊர் மாற்றம் குறித்த வேலைகளில் இருந்தமையாலும், இணைய இணைப்பு தேவையான அளவு பயன்படுத்தாமையாலும் மிகத்தாமதமாக இக்கட்டுரை படிக்க நேர்ந்தது!! சொந்த இல்லத்திலுருந்து வாடகை வீட்டுக்கு அதுவும் வேறு ஊரில் வந்திருப்பதால் இக்கட்டுரை கண்ணில் நீர் வர வைக்கிறது...சென்னையில் இருந்த போது வாசமே மாடியில்தான்.. அதுவும் பாதி வீடு... பாதி மொட்டை மாடி... இப்படி இருப்பதில் உள்ள சுகம் எனக்கும் தங்கராஜுக்கும் மட்டுமே புரியும். நானும் என் மனைவியும் இவ்வாறே உணவளித்து வந்தோம்..ஆனால் சென்னைப் பறவைகளும் அணில்களும் தானியங்கள் விரும்பவில்லை..(கோதுமை, அரிசி,வேர்க்கடலை மற்றும் பல முயற்சி செய்து பார்த்தாயிற்று!) பிஸ்கட் தான் பிரிய உணவு.. காலை ஆறரைக்கே அவர்களை விருந்தோம்பிப் பழக்கியிருந்தாள் என் மனைவி..கூடுதலாக வீட்டில் தயாரிக்கும் அனைத்துப் பண்டங்களும் அவர்களுக்கு(ம்) உண்டு.. ஒருவேளை எழுந்திருக்கத் தாமதமானால் எங்கள் குழந்தைகள் (நாங்கள் அப்படித்தான் சொல்லிக் கொள்ளுவது!!) வாயிலிலே காத்திருப்பர்!! அணில்கள், புறாக்கள் சிட்டுக்குருவிகள் மட்டும் கோலத்தில் இடும் அரிசி மாவை விரும்பி சாப்பிடுவர்... தேவை கூடுதலாகி விட்டால் அணில்கள் சமையலறை ஜன்னல் வந்து என் மனைவியிடம் உரையாடும்..சென்னை புறாக்களும் தவிட்டுக் குருவிகளும் மட்டுமே கோதுமை காயவைத்தால் அதனுள் குதித்து விளையாடிய பின் உண்ணுவர்...எங்களுக்கு காலம் நேரம் எல்லாம் இருந்ததில்லை... முதல் பாக்கெட்டுகள் ஆறரை மணி அவ்வளவுதான்..இந்தப் பதிவு படித்தவுடன் குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் கண்ணில் நீர்!!

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு
    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வலைப்பூ என்னை பிரமிக்க வைக்கிறது.
    இந்த வயதிலும்... எத்தனை பெருமை !
    உங்கள் வயது எங்களுக்கு வரும்போது, இதெல்லாம் இயலுமா, சந்தேகமே...
    உங்களுக்கு கிடைத்த கடவுள் கிருபை.. எங்களுக்கும் கிடைக்கட்டும்.
    facebook - ல் தங்களுக்கு நண்பரான நான், இப்போது வலைப்பூவிலும் தொடர்வது மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  14. ஐயா ...வாழ்த்துக்கள் .இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா...வியக்கிறேன்....தொடரட்டும் உங்கள் பணி...

    பதிலளிநீக்கு
  15. நெகிழச் செய்யும் பதிவு. பறவை வளர்ப்பு என்பதையும் தாண்டி அவற்றின் மீது தாங்கள் அனைவரும் காட்டும் ப்ரியங்கள் பாரதியின் வரிகளை நினைவூட்டுகின்றன. சலீம் அலீக்கள் எல்லா ஊரிலும் இருக்கத் தான் செய்கின்றர்கள். நன்றிகளும் பேரன்பும் அய்யா!

    பதிலளிநீக்கு
  16. நல்ல பயனுள்ள பதிவு ஐயா. தங்களின் உறவினர் திரு.தங்கராஜின் உயரிய குணங்களை ஒவ்வொருவரும் மனதினில் நிறுத்த வேண்டும். திரு.தங்கராஜ் அவர்கட்கு என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள் ஐயா

    அன்புடன்
    ரிஷி ரவீந்திரன்

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான பதிவு. உங்கள் பதிவைப்படிக்கும்போது ‘தேசியக்கவி பாரதியார் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியது நினைவுக்கு வந்தது.தங்கள் தமைக்கையின் மகனார் திரு தங்கராஜ் அவர்களது இந்த சேவைக்கு எனது பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  18. http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html
    உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்


    பதிலளிநீக்கு
  19. excellent post.Already I am in the same field sir. our back-yard is useful to this purpose..we are very pride about you and your relation family...very good post it is.our service also routine and going as for ever...

    பதிலளிநீக்கு