செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

அறிவியல் கட்டுரைகள் 
பாகம்- 1

திருமதி எஸ்.மோகனா அவர்களின் வானியல் கட்டுரைகள் இரண்டு வெளியிட்டோம்.  நாங்கள்  இது வரை எழுதிய பதிவுகளில் அவர்களது இரண்டாவது கட்டுரைக்கு தான் அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தன என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் வானியல் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில்  உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அந்த கட்டுரையை 'அறிவியல் - 1' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். இந்த கட்டுரை அவர்கள் முகநூலில் அவர்களது பக்கத்தில் 7.10.2010 அன்று வெளியிட்ட கட்டுரை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

நம் குழந்தைகளுக்கு நாம் சந்தோஷமாய் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதிலுள்ள வேதிப் பொருள்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நமக்குத் தெரிவதில்லை. நம் அரசும் அதனைப் பற்றி கவலையோ, அக்கறையோ கொள்வதில்லை.அதற்கான எந்த கொள்கை முடிவும் கிடையாது. அவரவர்  பெட்டி  நிரம்பினால் போதும் என்பதே அவர்களின் கொள்கை.மக்களின் உயிர் பற்றிய எண்ணம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. 


குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பொம்மைகள், நாம் பயன் படுத்தும் நெகிழிகளில்,அவை வளையும் படியும், கொஞ்சம் ஒளி ஊடுருவும்படியும் இருப்பதற்காக சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன.

அவைகளில் முக்கியமானவை  தாலேட் (Pthalate) மற்றும் பிஸ்பினால் A ( BIsPhenol A). இவைகள் நம் உடலுக்கு முக்கியமாக பிஞ்சுகளின் பஞ்சு மேனிக்கு தீங்கு விளைவிப்பவை யாகும். நம் குட்டிகள் பல் முளைக்கும் பருவத்தில் அவைகள் கடிப்பதற்காக சில நெகிழி பொம்மைகளைநாம் அன்பை முக்கி,  வாங்கி கொடுக்கிறோம்.அவை நம்  ஆசை செல்வங்களுக்கு தரும் துன்பத்தை அறியாமலேயே. ! அதிலுள்ள வேதிப் பொருள்கள் குழந்தைகளின்  வளர்ச்சியைகுறைக்கின்றன: நரம்பு மண்டலத்தில் சில சரி செய்ய முடியாத பிரச்சனைகளை உருவாக்கு கின்றன; அத்துடன் சில புற்றுநோய் காரணிகளையும் தானமாகத் தருகின்றன என ஆராய்ச்சி தகவல்கள் சொல்வதாக,அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட்ட வேதிப் பொருள்கள் உள்ள முக்கியமாக பிஸ்பினால் A உள்ள குழந்தை பொம்மைகளை முதலில் 2007 லேயே தடை செய்தது கனடா அரசுதான். பின் ஐரோப்பிய யூனியன்  , பிரான்சு, அமெரிக்க அரசுகள் தடை செய்துள்ளன. இதைப் பற்றி நம் இந்திய அரசு மூச்சு கூட விடவில்லை.

  நம் இந்திய அரசுக்கு இப்போதுதான் இது பற்றிய ஞானோதயம் பிறந்துள்ளது. நம் அரசு  2009  நவம்பரில் 11 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி உள்ளது. இக்குழு  இந்திய மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப் பட்டு இந்தியாவில்  பயன் படுத்தப் படும்,குழந்தை பொம்மைகளில் உள்ள  நச்சுப் பொருட்களை முக்கியமாக, கன உலோகங்களை ஆராய்வதற்கான சோதனைகளை செய்யும். இந்த சோதனைகள் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2 ,800௦௦ கம்பெனிகளின் பொம்மைகளில்  ,( சாதாரண சின்ன கடையில் இருந்து, பெரிய சூப்பர் மார்கெட்டில் உள்ளது வரையிலான பொம்மைகளை )சோதனை செய்யும்.   இந்த தகவலை, தேசிய உணவு நிறுவனத்தின் துணை இயக்குனரான B.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சோதனை 2010௦,அக்டோபர் முதல் துவங்கப்படும். இக்குழுவில் அகமதாபாத்தின்,தேசிய தொழில் நிறுவனம், ஹைதராபாத்தின் தேசிய உணவு நிறுவனம் மற்றும் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்ளனர்.

பொம்மைகளை சோதனை செய்யும் குழு எவ்வாறு உருவாக்கப் பட்டது தெரியுமா? குழந்தை பொம்மைகளில் உள்ள நஞ்சு மற்றும் கன உலோகங்கள் பற்றியும், அதன் பிரச்சினை மற்றும் சிக்கல் பற்றியும் சில தன்னார்வல இயக்கங்கள் அரசு மாற்றும் நீதி மன்றத்திடம் புகார் செய்தன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சோதனை செய்தது. அதன் விளைவாக ஓர் உத்தரவை மைய அரசுக்கு போட்டது. அந்த உத்தரவின் படியே பொம்மைகளில் உள்ள கன உலோகங்களை ஆராய்ந்து  அதனை  கட்டுப் படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த நச்சுப் பொருற்கள், பிஞ்சுகளின் வாய் வழியே சென்று, உடலின் பல பகுதிகளுக்கும் சென்றுவிடும். குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்;வளர்ச்சி பாதிக்கப்படும். உடலுக்குள் உள்ள உறுப்புகளை, குறிப்பாக நரம்பு மண்டலத்தில் , சரி செய்ய முடியாத சிதைவுகளை உண்டாக்கும் என அறியப்பட்டுள்ளது. பொம்மை சோதனை செய்யும் கருவி ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்  பட்டுள்ளது.இதன் விலை ஒரு கோடி ரூபாய் என திட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்

குறிப்பு: இது ஏதோ குழந்தைகள் பொம்மைகளில் மட்டும்தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். ஒளி ஊடுருவும் அனைத்து வகை நெகிழிகளிலும்  உள்ளது. முக்கியமாக, மருத்துவ மனைகளில் பயன்படுத்தப் படும், ஊசி போடும் குழாய்கள், குளுகோஸ் மற்றும் இரத்த குழாய் சிரைகள் மூலம் மருந்துகள் செலுத்தப்படும் அனைத்துவகையான பைகளிலும் பிஸ்பினால் A மற்றும் தாலேட் உள்ளது. 


வேறு வழியே இல்லாமல்,நோயாளிகளின் உயிர் காக்கும் செயலுக்காகவும், இந்த ஒளி ஊடுருவும் தன்மைக்காகவும்  இதனை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒரு முறை பயன் படுத்திய பின் இவற்றை தூர வீசி எறிய வேண்டியது அவசியமாகும். மேலும் கூடியவரை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் கண்ணாடியில் இருப்பது நலம். நான் பார்த்தவரை  ராமகிருஷ்ணா போன்ற மருத்துவ மனைகளில் குளுகோஸ் கண்ணாடி பாட்டில் களிலேயே கொடுக்கப் படுகிறது. நீங்களும்  கூட மினரல்  தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பத்திரப் படுத்தி பயன்படுத்த வேண்டாம். நெகிழி பொருள்களில் ௧-௪ என்ற என போட்ட பொருள்கள் கொஞ்சம் பாதுகாப்பானவை என தெரிகிறது. 


இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.



இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்


ஸ்ரீஆண்டாள் கோவில் ஏழாம் நாள் திருவிழா:



ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், கேள்விப் பட்டிருப்பீர்கள்.  குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவைப் பார்ப்போம். 
ஸ்ரீ வில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில் தெரு இருப்பது இங்குள்ளவர்களுக்கு தெரியும்.  அங்கு ஒரு அருமையான பெரிய கிருஷ்ணன்கோவில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது.  ரயில்வே நிலையம் செல்லும் வழியில் தாலுகா அலுவலகம் இருக்கிறது.  அதில் அத்திகுளம்  செல்லும் பாதை பிரிகிறது.  அந்த பாதையில் தாலுகா அலுவலகத்திற்கு பின் புறம் பெரிய கிருஷ்ணன்கோவில் இருக்கிறது.  அது வருடம் முழுவதும் திறந்திருக்குமா என தெரியவில்லை.  இந்த ஏழாம் நாள் திருவிழா (31.7.2011) அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


ஸ்ரீ ஆண்டாள் வீற்றிருக்க ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்திருக்கும் சயன சேவை. இந்த சயன சேவை ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருவிழாக்களில் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.  நான் இந்த வருடம் தான் பார்த்திருக்கிறேன்.  

அன்று இரவு ஏழு மணிக்கு சயன சேவை ஆரம்பிக்கும்; கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் வருகை இருக்கும்; தரிசனம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.


நாங்கள் மாலை ஆறரை மணியளவில் சென்று விட்டோம்.  நிறைய ஆட்டோக்கள், மினிபஸ், நகரப்பேருந்துகள், இருசக்கர வண்டிகள், நடந்து செல்லும் கூட்டம், அந்த சாலை நிறைந்து விட்டது.  இந்த அளவு கூட்டம் அந்த சாலையில் நான் பார்த்தது கிடையாது.  இந்த திருவிழாவிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அருமையாக செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் இந்த கோவிலுக்கு வந்தது இது தான் முதல் தடவை.  முகப்பு மிகவும் அழகாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.  கோவிலில் ராஜகோபுரம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முதல் தளம் மட்டும் கட்டப்பட்டு தடைப்பட்ட மாதிரி இருக்கிறது.  அது நிறைய வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். கோவில் மிகவும் பெரிய கோவிலாக இருக்கிறது.  திருவிழாவிற்காக நன்கு வெள்ளையடிக்கப்பட்டு சுற்றிலும் தரை செடிகள், முட்செடிகள் எல்லாம் களையப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது.  அப்படியும் நடக்கும் போது தரை காலைப் பதம் பார்க்கிறது.  வெளிப்பிரகாரம் பெரியதாக இருக்கிறது.  சன்னதியில் கிருஷ்ணர் இருக்கிறார்.  நல்ல சிலைகள் இருக்கின்றன.  (இந்த கோவிலை இன்னொரு நாள் அனுமதி வாங்கி புகைப்படங்கள் எடுத்து விபரங்களை சேகரித்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்).  தரிசனம் செய்தோம்.

முனனால் உள்ள மண்டபத்தில் சயன சேவை  அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.  உள்ளும் நிறைய ஜனங்கள்.  

உள்ளூர் பக்தர்களை விட வெளியூர், வெளி மாகாணத்திலிருந்து வந்த பக்தர்களின் ஈடுபாடு மிகவும் அற்புதமாக இருந்தது.  ஆச்சரியமாக இருந்தது.  ஆந்திராவிலிருந்து ஒரு குழு கிட்டத்தட்ட முப்பது பேர்கள் இருக்கும் - ஆண்களும் பெண்களும் சேர்ந்து - மிகவும் சிரத்தையுடன் அலங்கரித்து வாத்தியங்களுடன் நடனக் கச்சேரி நடத்தினார்கள். அதை முடிந்தவரை புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம். 


சயன சேவை ஏழரை மணிக்கு ஆரம்பித்தது.  அதையும் முடிந்தவரை புகைப்படம் எடுத்தோம்.  (எங்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் புகைப்படம் எடுப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை- ஒரு மூலையில் நகர முடியாமல் மாட்டிக் கொண்டோம்).  



வெளியே நிறைய கூட்டம் இருந்ததால் முன்கதவை அடைத்து எங்களை கோவிலின் இடது புறம் உள்ள பாதை வழியாக வெளியே அனுப்பினார்கள்.  வெளியே வந்து பார்த்தால் வரிசை அனுமார் வால் மாதிரி நீண்டிருந்தது.  கிட்டத்தட்ட அவர்கள் உள்ளே செல்ல இரண்டு மணி நேரமாவது ஆகும்.  அந்தக்கூட்டத்தை புகைப்படம் எடுத்து தொகுத்திருக்கிறோம்.  (உடனே வந்து சயன கோலத்தை முக நூலில் ஏற்றி விட்டோம்-எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது).


ஆடிப்பூர தேரோட்ட திருவிழா


எங்கள் ஊரின் சிறப்பு ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா. 2.8.2011 அன்று திருவிழா காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிப்பு இருந்தது.  நாங்கள் காலை ஆறு மணிக்கு சென்று விட்டோம்.  ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்கமன்னாரையும் தேரில் ஏற்றுவதற்கு முன்பு நீராவி பள்ளிக்கூடத்தின் வாசலில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று.  நாங்கள் சற்று தாமதம்.  ஸ்ரீ ஆண்டாள் தேர் ஏறி விட்டார்.  தேர் பக்கம் வந்தோம்.  ஓரளவு கூட்டம் இருந்தது.  தேர் மிக அற்புதமாக ஜோடனை செய்யப் பட்டிருந்தது.  புதிய வடங்கள் மாற்றப் பட்டிருந்தன.  காவல்துறையினர் நிறைய இருந்தனர்.  அவர்களது ஏற்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.  மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

தேரின் பின்புறம்:

தேரின் பின்புறம் புல்டோசர்கள் இருந்தன.  இரண்டு லாரிகளில் சறுக்கு கட்டைகள் இருந்தன.  தீயணைப்பு வாகனங்கள் நின்றன.  அரசின் ஏற்பாடுகள்  மிகவும் அருமை.  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.  அவர்களின் சேவையை மனமார பாராட்டுவோம்.  


தேரின் முன்புறம் மயில் தோகை விசிறிக் கொண்டு மூன்று பேரை பார்த்தோம்.  அதில் ஒரு பெரியவர் வயது எண்பதுக்கு  மேல் இருக்கும்.  அவர் எல்லா ஊர் திருவிழாவிற்கும் செல்வார் என்று சொன்னார்கள்.  செய்தித்தாளிலும் படித்திருக்கிறேன்.  அவரது புகைப்படத்தையும் கொடுத்திருக்கிறோம்.  மற்ற இருவர் இதிலும் விளம்பரம் தாங்கியிருந்தார்கள்.  வெளி மாநிலத்திலிருந்து வந்த பக்தர்கள் குழு குழுவாக வந்து பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.  நிறைய குழுக்கள்.  முடிந்த அளவு புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம்.  ஒருவர் அனுமார் வேஷம் போட்டிருந்தார்.  சிறுவர்களுக்கான வியாபாரங்களும் களைகட்டியிருந்தன. 



 
கதிரவன் ஹோட்டல் 


எங்கள் ஊரின் மற்றொரு சிறப்பம்சம் கதிரவன் ஹோட்டல்.  அவர்கள் வியாபாரம் மாதிரி நடத்தவில்லை.  ஒரு சமூக சேவை மாதிரி நடத்துகிறார்கள்.  எனக்கு தெரிந்தவரை - வருமான வரி, விற்பனை வரி, பிராவிடன்ட் பண்ட், ESI - மற்றும் அனைத்து வரிகளையும்  கட்டி அவர்களது தொழிலாளர்களுக்கும் நன்கு சலுகைகள் செய்கிறார்கள்.  அங்கு சாப்பிடுவது ஒரு நல்ல அனுபவம்.  நாங்கள்  காலை உணவு அங்கு சாப்பிட்டோம்.  நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தால் அங்கு சாப்பிட்டு பாருங்கள்.  பிறகு சாப்பிடுவதற்காக எங்கள் ஊருக்கு வருவீர்கள்.  வாழ்க அவர்களது பணி.  இதில் ஒரு பங்குதாரர் திரு பாலச்சந்திரன் எனது பள்ளி தோழர்.

அதன் அருகில் ராம்கோ சிமின்ட்டின் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  முன்பு நல்ல கூட்டம் இருந்தது.  அந்த ஸ்டாலும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஸ்டால் முகப்பையும் பின்பு ஸ்டால் உள்ளே அவர்களது செயல்பாட்டினையும் (நீர், மோர், படங்கள் வழங்குவதை) புகைப்படம் எடுத்தோம்.  உள்ளே எங்களது அருமைப்பிள்ளை திரு ராம்குமார் இருந்திருக்கிறார்.  நான் கவனிக்கவில்லை. அவர் வெளியே வந்து விட்டார்.  எங்களுக்கு மிகவும் சந்தோசம்.

திரு ராம்குமாரைப் பற்றி :

நாங்கள் திருமுக்குளம் பற்றி எழுதியிருந்தபோது திரு வினோத் பாபு என்று ஒரு நண்பர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர்) பின்னூட்டம் எழுதினர்.  அவர் திரு ராம்குமாரின் பதிவை அறிமுகப்படுத்தினார்.  ராம்குமார் பதிவும் எழுதுகிறார். முகநூலிலும் இருக்கிறார்.  
அவரது தளத்தின் பெயர்: சிவகாசிக்காரன்
தளத்தின் இணைப்பு: http://sivakaasikaaran.blogspot.com/
முகநூலில் அவரது இணைப்பு:
http://www.facebook.com/profile.php?id=1147750586

இந்த பதிவுலகமும் முகநூலும் எங்களுக்கு அளித்தது நிறைய.  நிறைய நண்பர்கள், நிறைய பாசமுள்ள மகள்கள், ராம்குமாரைப் போன்ற பாசமுள்ள பிள்ளை. 

பார்த்தால் பசு - பாய்ந்தால் புலி:
பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறார்.  அவரது பதிவுகளும், கதைகளும், அவர் முகநூலில் கொடுக்கும் செய்திகளும் ஆச்சரியமாக இருக்கும்.  நன்கு யோசிக்கும் சுறுசுறுப்பான இளைஞர். இன்று சொல்கிறேன் - அவர் பெரிய ஆளாக வருவார்.    எங்களது பாசப் பிள்ளை அருமை ராம்குமார் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். நாங்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் கொடுத்திருக்கிறோம்.  
 
மற்றும் ஹைதராபாத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்கள்.  அவர்களுடன் எடுத்த புகைப்படமும் கொடுத்திருக்கிறோம். எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள்.  உள்ளூர்காரர்கள் தான் செல்வதில்லை.


மீண்டும் தேருக்கு வருவோம்.  தேர் இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  தேரில் திரு பாலகிருஷ்ணன் ஆசிரியர் தலைமையில் உற்சாகம் ஊட்டும் அணி - இவரது நடவடிக்கைகளை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம். 

தேர் இழுக்க இளைஞர் படை, அதை பார்ப்பதற்கு நல்ல கூட்டம், மாடியிலிருந்தும் பார்க்கிறார்கள்.  இடையில் நிறுத்தி விட்டால் இளைஞர்கள் யாராவது ஒருவரை தூக்கி போட்டு விளையாடுகிறார்கள்.  உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.  வடம் புதிதாக மாற்றியிருக்கிறார்கள்.  எனவே முக்கு திரும்பும்போது வடத்தை எளிதாக தூக்குகிறார்கள்.  ஆனாலும் இது மிகப்பெரிய பணி. எல்லோரது ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.


            





  இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது மனைவி திருமதி உமாகாந்திக்கும், நிறைவு நாள் அன்று புகைப்படங்கள் எடுத்த திருமதி ரமாமணி அவர்களுக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி. இந்த பதிவு ஸ்ரீ ஆண்டாள் கிருபையால் எழுத முடிந்தது.

இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும். 

மிக்க நன்றி.


செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவண்ணாமலை அருகில் உள்ள தரகுமலை மாதா கோவில்




ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கோவில் இருக்கிறது. அதன் அருகில் (சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்) பெரிய மலை ஒன்று உயரமாக கம்பீரமாக இருக்கிறது. நீங்கள் மதுரையிலிருந்து வரும்போது கிருஷ்ணன்கோவில் தாண்டினால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருக்கும்.  திருவண்ணாமலை சிறிய மலையாகவும், இந்த மலை உயரமாகவும் இருக்கும். 

தரகுமலை மாதா கோவில் தோன்றிய வரலாறு:
1973 வருட வாக்கில் தரகுமலையில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்களுக்கு மலை உச்சியில் மாதா காட்சியளித்ததாக செய்தி பரவியது.  நாளேடுகளிலும், பார்வையாளர்கள் (கேரளாவிலிருந்து நிறைய) வருகையினாலும் இந்த ஸ்தலம் பிரபலமாக்கப்பட்டது.  
முதலில் ஏசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலை மட்டும் ஒரு பீடத்தில் நிறுவப்பட்டது.  பாதைகள் கிடையாது.  அப்போது நான் உயர ஏறிச் சென்று பார்த்திருக்கிறேன். பிறகு மாதா சிலை நிறுவப்பட்டிருக்கலாம்.  மாதாவுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்று சொன்னார்கள்.  மக்கள் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை செல்வது வழக்கம். அங்கு முன்பு செல்வதற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும்.


நான் இந்த பதிவு எழுதுவதற்கு காரணம் - எனது இனிய நண்பர் கென்யா ராகவன் (மதுரைக்காரர் - எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் தீராக் காதல் கொண்டவர் - ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருக்கிறார்.  பதிவுலகில் இருக்கிறார்.  முக நூலில் எனக்கு நண்பர் - நிறைய தடவைகள் என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அவர் தம்பி இங்கு இருக்கிறார். ) எங்களது நரிப்பாறை பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை பாருங்கள். நான் எழுதிய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பின்னூட்டம் இது

அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எத்தனை நாளாச்சு தாய் தகப்பனைப் பாத்து, மனைவி குழந்தைகளை பாத்துன்னு ஒரு ஏக்கம் வருமே அது மாதிரி இருந்தது. அந்த பெரியவர்களின் பெயர்கள் வினோதமாயும் அழகாயும் இருந்தது... மதுரைன்னு பேர் பரவலாக புழங்குவது போல, ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு பேரோ அல்லது பிள்ளையார் என்ற பேரோ நான் கேள்விப்பட்டதே இல்லை... 

அந்த மேற்குத் தொடர்ச்சி மலை, ஆகாசத்துக்கே பாலூட்டுவது போன்ற அதன் திறந்த மாரும், அதன் கீழே தென்னைமரங்களும், திருநாமலையில் இருந்தாலும் தெளிவாய் தெரியும்... நரிப்பாறையின் தொன்மை போலவே அதில் இருக்கும் அந்த பழுத்த பெரியவரின் முகமும். ரொம்பவும் முன்னால் போயிருக்கிறேன்... நரிப்பாறைக்கு, ஆனால் நீங்கள் சொன்னது போல இத்தனை சிறுதெய்வங்களை பார்த்தது இல்லை... அல்லது ஞாபகம் இல்லை... தரகுமலை வேதக்கோயில் பற்றித் தெரியும் ஆனால் போக வாய்த்ததில்லை இது வரை... நீங்க போயிட்டு வாங்க! நாங்களும் போயிட்டு வர்றோம்... பதிவினூடே...

அன்புடன்
ராகவன்
1 ஆகஸ்ட், 2011 6:27 pm 


 http://koodalkoothan.blogspot.com/

 இந்த பதிவை திரு ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  அவரது புகைப்படமும் கொடுத்திருக்கிறேன்.  அவரது தளத்திற்கான இணைப்பும் கொடுத்திருக்கிறேன். 
தளத்தின் பெயர் ராகவன்

நாங்கள் நரிப்பாறையிலிருந்து கிளம்பும் போதே கேமரா பேட்டரி முழுவதும் சக்தி இழந்து விட்டது.  அதற்குப் பிறகு எடுத்த படங்கள் எல்லாம் செல் போன் வழியே எடுத்த படங்கள் தான்.  அதனால் இந்த கோவிலுக்கான வலைத்தளத்திலிருந்தும் சில படங்களை எடுத்திருக்கிறோம். 
கோவிலின் வலைத்தள முகவரி.
www.tharagumalaishrine.com



வரும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு இடம் இருந்தது.  வெளியிலிருந்து புகைப்படம் எடுத்திருக்கிறோம்.  விபரங்கள் தெரியவில்லை.  பின்பு மாதாமலைக்கு வந்தோம். திருவண்ணாமலையிலிருந்து சித்தர்பீடம் வழியாக மாதாமலை முடிய அருமையான தார் சாலை போடப்பட்டிருக்கிறது.  இது தற்போது தான் போடப் பட்டிருக்கும்.  அந்த புகைப்படங்களை கீழே கொடுத்திருக்கிறோம். 











திருவிழா ஒன்று நடைபெற இருக்கிறது.  அந்த அழைப்பிதழை ஸ்கேன் செய்து இத்துடன் கொடுத்திருக்கிறோம்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 

போக்குவரத்து:
 
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சித்தர்பீடத்திற்கு திருவண்ணாமலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை மினிபஸ் இருக்கிறது.  அரசாங்க நகர் பேருந்தும் இருக்கிறது.  அது எத்தனை தடவை வருகிறது என்ற விபரம் தெரியவில்லை.  ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது.  திருவண்ணாமலை அடிவாரத்திலும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது.  எனவே போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை.

மலை நல்ல உயரம்.  எனவே வயதானவர்கள் உயரே செல்ல முயற்சி செய்து சிரமப்படாதீர்கள்.  ஒரு பெண்மணி இறங்க முடியாமல் வழியில் இருக்கும் படத்தை பாருங்கள்.

 
இங்கு கடைகள் எதுவும் இல்லை.  எனவே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், நொறுக்குத்தீனிகளை அங்கிருந்தே கொண்டு வந்து விடுவது நல்லது.  பாலிதீன் உபயோகிக்காதீர்கள்.

மலைக்கு உயரே செல்லும் வழி, இடையிலுள்ள சிறு சிறு ஆலயங்கள், உயரே உள்ள ஆலயங்கள், மலையிலிருந்து திருவண்ணாமலை காட்சி, நகர்ப்புற காட்சி அனைத்தையும் கீழே கொடுத்திருக்கிறோம்.





 


இந்த தொகுப்பில் எங்களது பேரன் தீபன் சக்ரவர்த்தியின் படங்களையும்  தொகுத்திருக்கிறோம். இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது தங்கை மகன்கள் - அருண் ஸ்ரீராம், அசோக் குமார் (இரட்டையர்கள்) - அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.





இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.



எங்களது அணியினரை திறம்பட நடத்திச் சென்ற எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களும் நன்றியும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.



வியாழன், ஆகஸ்ட் 04, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

(EMPLOYEES PROVIDENT FUND)
 பிரச்னைகளும் தீர்வுகளும்
பாகம் - 4

குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரங்கள் நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா?

இது இன்னுமொரு பிரச்னையும் தீர்வும்.  இந்த தொழிலாளியின் மரணம் நடந்தது 4.6.1992 ஆம் நாள்.  அப்போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்  தொழிலாளர்கள் இறக்கும்போது வேலையில் இருந்தால் தான் பென்ஷன் வழங்கப்படும்.  குடும்ப பென்ஷன் கிடையாது.  குடும்ப பென்ஷன் திட்டம் 16.12.1995 நாளன்று அமலுக்கு வந்தது.
 
இந்த தொழிலாளர் இறக்கும்போது வயது 39 இருக்கும்.  அவரது மனைவியின் வயது 36.  இவர் இறக்கும்போது ஏழு குழந்தைகள் இருந்தார்கள்.  பெயர் கொடுக்கவில்லை.  வயது விபரங்கள், ஆண், பெண் விபரங்கள் கொடுத்திருக்கிறேன்.

      குழந்தை        -   வயது
  1.    ஆண்       -     18
  2.    பெண்         -      16
  3.     பெண்         -      13
  4.     பெண்         -       9
  5.     பெண்         -       8
  6.     பெண்         -       6
  7.     ஆண்        -     2 
  8.  
யோசித்துப் பாருங்கள். அவரது மனைவியின் வயது முப்பத்தி ஆறு. ஒரு வங்கி வாசலில் வைத்து பழங்கள் விற்றுக் கொண்டிருப்பவர். அந்த தொழிலாளி  இறக்கும்போது ஏழு குழந்தைகள் (இரண்டு ஆண் குழந்தைகள் & ஐந்து பெண் குழந்தைகள்) பதினெட்டு வயதிலிருந்து இரண்டு வயது வரை. அவரது குடும்பத்தின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.  எவ்வளவு பரிதாபம். 

ஒரு கேள்வி.  குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் பெரிய மாநகரங்களில் மட்டும் நின்று விட்டதா?  நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா? 



மருத்துவ மனைகளில் போய் பிரசவம் பார்க்காமல் வீட்டிலேயே  மருத்துவச்சிகளை வைத்து பிரசவம்  பார்ப்பதால் அரசாங்கத்தின் கண்களில் இருந்து தப்பி விடுகிறதா?  இது ஒரு பெரிய பிரச்னை தான்.  1992 உடன் நின்று விடவில்லை.  இப்போதும் (2011) இருக்கிறது. நான் நேற்று கேள்விப்பட்ட தகவல் கிட்டத்தட்ட ஒரு நாற்பத்தி ஏழு வயது பெண்மணி ஒருவருக்கு ஏழாவது குழந்தை (பெண்) இருபது நாட்களுக்கு முன்பு பிறந்திருக்கிறது.  கேலி செய்யவில்லை.  மிகவும் தீவிரமான பிரச்னை.  அரசாங்கம் மட்டுமல்ல எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம்.  அந்த உறுப்பினர் மருத்துவமனை சென்று வரும்போது வழியில் மயக்கம் வரும்போல் இருக்கிறது என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறார்.  அப்படியே சரிந்து விழுந்து இறந்து விட்டார்.  எல்லாம் முடிந்த பிறகு எங்களை அணுகினார்கள்.  நாங்கள் எல்லா ஆவணங்களையும் வாங்கி அனுப்பி பென்ஷன் வாங்கிக் கொடுத்தோம். 

அவரது மனைவிக்கும், அவரது முதல் இரண்டு குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைத்தது.  ஒரே தடவையில் (at a time) இரண்டு குழந்தைகளுக்கு கிடைக்கும்.  அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது ஆகும் போது அடுத்த குழந்தைகளுக்கு இயல்பாக (automatically) பென்ஷன் வர ஆரம்பிக்கும். 

இது தொழிலாளர்களுக்கு நல்ல ஒரு திட்டம்.  எங்களைப் போன்ற குறைந்த சம்பளம் வாங்கும்  தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும்  அருமையான திட்டம்.

தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறந்தால் மாநில அரசாங்கத்திலிருந்து அப்போது ஈமக்கிரியை செலவுகளுக்காக முன்னூறு ரூபாய் கொடுத்தார்கள்.  இப்போது அந்த தொகை 2500 கொடுக்கிறார்கள்.  அந்த தொகையை ஒரு மொத்தத் தொகையாக (as a lump sum amount) ரூபாய் ஒரு லட்சமாக கொடுக்கலாம். இந்த உதவி 
குடும்பத் தலைவனை/
குடும்பத் தலைவியை/
உழைக்கும் மகனை/
உழைக்கும் மகளை - 
இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும்.  இதை அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், தொழிலார்களும் வற்புறுத்த வேண்டும்; கேட்டுப் பெற வேண்டும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.  உங்களது பெயரை Followers ஆக Google Connect இல் பதிந்து கொள்ளுங்கள்.  Email address என்ற கட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Inbox க்கு வந்து விடும்.





இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி.