வியாழன், ஜூன் 09, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)

பிரச்னைகளும் தீர்வுகளும்.

பாகம்-1

நான் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறேன்.  அதில் உள்ள பல்வேறு பணிகளில் எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்த பணி 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி' சம்பந்தப்பட்ட பணி.  இது தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது.  நாம் செய்யும் வேலை நேரடியாக தொழிலாளர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் உதவிகள் கிடைக்கும்.

நான் ஒரு உறுப்பினருக்கு அவர் 2005 இல் வேலை முடித்து போகும்போது அவருக்கான கிளைம் படிவங்களை தயார் செய்து அனுப்பினோம்.  அவருடைய பணிக்காலம் இருபத்திரண்டு வருடங்களுக்கு மேற்பட்டது.  அவரது வயது அப்போது ஐம்பதுக்கு கீழ்.  எனவே பணிக்காலத்திற்காக' படிவம் பத்து சி' நிரப்பி அனுப்பினோம்.  அவரது குடும்ப விபரங்கள், அவரது மூன்று பையன்களுக்கு பிறந்த தேதி கொடுப்பதற்காக 'பள்ளிச் சான்றிதழ்கள்' சேர்த்து அனுப்பி வைத்தோம்.

அவருக்கு வைப்புநிதிக்கான கிளைம் கணக்கு முடித்து வந்து விட்டது.  பென்ஷனுக்கு அவர்கள் [SCHEME CERTIFICATE] வழங்க வேண்டும்.  அவர்களுக்கு சில சந்தேகங்கள்.  விபரத்தை பாருங்கள்.  நாங்கள் அவருடைய பையன்களுக்கு கொடுத்த பிறந்த தேதி விபரங்கள்.
மூத்த பையன்                            19.3.1985
 இரண்டாவது பையன்                      5.10.1990
 மூன்றாவது  பையன்                      6.3.1991
அலுவலகத்திலிருந்து க்ளைம் படிவங்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்.  அவர்களது சந்தேகம் என்ன என்றால் 'இரண்டாவது பையனுக்கும் மூன்றாவது பையனுக்கும்' உள்ள இடைவெளி ஆறு மாதங்கள் தான்.  அவர்களது சந்தேகம் நியாமானது தான்.  நான் உறுப்பினரைக் கூப்பிட்டு விபரம் கேட்டேன்.  அவர் ஜாதகக் குறிப்பு இருப்பதாகவும், பள்ளியில் அவர்களாக பிறந்த தேதி போட்டுக்கொண்டார்கள் எனவும் கூறினார்.  அவர் சொன்னது சரி தான்.  முன்பு பிறந்த விபரம் நகராட்சிகளிலோ கிராமத்து பஞ்சாயத்திலோ பதிவது கிடையாது.  எனவே பள்ளிக்கு செல்லும்போது அங்கு உள்ளவர்களே குத்து மதிப்பாக வயது போட்டுக் கொள்வார்கள்.  எல்லோருக்கும் அநேகமாக பிறந்த தேதி ஜூன் அல்லது மே கடைசியில் தான் இருக்கும்.  ஆனால் நமக்கு சிக்கல் வந்து விட்டதே.அவரது ஜாதகத்தில் உள்ள தேதிகளை வாங்கினேன்.  விபரங்களை பாருங்கள்.
                         பள்ளி சான்றிதழ் படி         ஜாதகப்படி 
இரண்டாவது பையன்         5.10.1990                  18.6.1990
மூன்றாவது பையன்           6.3.1991                   7.8.1991
அந்த உறுப்பினரிடம் ஒரு கடிதம் வாங்கி வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நாங்கள் அவரது மனுவை நாங்களும் கையெழுத்திட்டு அனுப்பினோம். மனுவின் சாராம்சம்.

நான் படிக்காதவன். நாங்கள் விவசாய சூழலில் வளர்ந்தவர்கள். எங்களது கிராமப்புறங்களில் 'ப்ரீ கேஜி' , 'எல் கேஜி' போன்ற வகுப்புகள் கிடையாது. அதனால் ஓரளவு வயது வந்தவுடன் முனிசிபல் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளுக்கு அனுப்புவோம். நாங்கள் பிறந்த விபரங்கள் பதிவது பழக்கம் இல்லை என்ற படியால் பள்ளிகளிலும் 'பிறப்பு சான்றிதழ்' கேட்க மாட்டார்கள். ஜூன் மாதம் என்றால் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து போட்டுக் கொள்வார்கள். விஜய தசமி சமயம் என்றால் அதே மாதிரி ஐந்து வருடங்கள் கழித்து போட்டுக் கொள்வார்கள். இது தவிர அவர்கள் எந்த தேதி போட்டிருக்கிறார்கள் என்ற விபரமும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விபரமும் எங்களுக்கு தெரியாது. இப்போது தான் பள்ளியில் வாங்கி வந்தோம். எனவே இந்த இரண்டு தேதிகளையும் கொடுத்திருக்கிறேன். நீங்கள் பதிந்து கொடுத்து 'ஸ்கீம் சர்டிபிகேட்' கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என எழுதி இருந்தார்.

பின்பு பள்ளி சான்றிதழ் படி பிறந்த தேதிகளை போட்டு 'திட்ட சான்றிதழ்' வழங்கினார்கள். ஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது.

இந்த அரசாங்க திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள். இதில் மக்களது ஒத்துழைப்பு முழுமையாக இருப்பதில்லை. பிறந்த தேதி சரியாக தர மாட்டார்கள். அதனால் தான் மேற்படி சிக்கல். பெயரை முழுமையாக சொல்ல மாட்டார்கள். தகப்பனார் பெயரை, தாயார் பெயரை முழுமையாக சொல்ல மாட்டார்கள். புகைப்படங்கள் கேட்டால் தர மாட்டார்கள். ஏதாவது பிரச்னை வந்தால் நிர்வாகத்தையும், அரசாங்கத்தையும் குறை சொல்லிக் கொண்டு திட்டிக் கொண்டு செல்வார்கள். எல்லோருடைய ஒத்துழைப்பும் முக்கியம்.

மிக்க நன்றி.

17 கருத்துகள்:

  1. மிக சரியாக சொன்னீர்கள் சார், நானும் அதே துறையில்தான் இருக்கிறேன், இப்பொழுது இஎஸ்ஐ ஸ்மார்ட்கார்டுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரின் பிறந்த தேதியும் தேவைப்படுகிறது, பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இந்த தேதிகள் தெரிவதில்லை, நாமே குத்துமதிப்பாக போடும் போது பின்னர் பிரச்ச்னையாகிவிடுகிறது

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள பதிவு
    அவரவ்ர்களுக்கு இப்படி நேர்ந்த பிரச்சனைகளையும்
    அதை சரிசெய்த முறைகளையும் பதிவாகப் போட்டால்
    அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ள பதிவு. மக்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பதிவு நல்ல உபயோகம் உள்ளபதிவு வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு சார்.

    நீங்கள் கூறியதுபோல் விபரங்கள் கொடுப்பதில் பெரும்பாலானவர்கள் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இப்போதுள்ள மக்களுக்கு பிறப்புச் சான்றிதழின் அவசியம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. இது பலருக்கும் நல்ல படிப்பினை அய்யா !நன்றி

    பதிலளிநீக்கு
  7. விழிப்புணர்வு பகிர்வு. நிச்சயம் பலருக்கு வழிகாட்டும்.

    பதிலளிநீக்கு
  8. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள பதிவு
    அவரவ்ர்களுக்கு இப்படி நேர்ந்த பிரச்சனைகளையும்
    அதை சரிசெய்த முறைகளையும் பதிவாகப் போட்டால்
    அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. ஆமாம். எங்க அப்பாவுக்கும் மாமனாருக்கும் வயது அதிகமா கொடுத்து பள்ளியில் விட்டதா சொல்வாங்க. அதுனால சர்வீஸ்ல ஒன்றிரண்டுவ் வருடங்கள் குறைஞ்சு போச்சுன்னும் சொல்வாங்க.. சார்.

    பதிலளிநீக்கு
  11. காலத்திற்கு ஏற்ற பதிவு
    மக்களின் அறியாமை இருளை போக்குதல் மிக அவசியமாகிறது , அரசின் திட்டங்களை சென்றடைய ...............

    உங்களைப்பற்றிய செய்திகளை படித்த போது அசந்து போனேன்
    உங்கள் முயற்சிகளுக்கு என் மானசீக நன்றிகள் ஐயா

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள கருத்துக்கள் அடங்கிய பதிவு!

    பதிலளிநீக்கு